தமிழக மக்களைத் தவறாக வழிநடத்துகிறார் ஸ்டாலின்! பியூஷ் கோயல்
முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களைத் தவறாக வழிநடத்துகிறார் என பியூஷ் கோயல் தெரிவித்தது குறித்து...
முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களைத் தவறாக வழிநடத்துகிறார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட அஸ்ஸாம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடத்த தேர்தல் ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலே வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தல், கூட்டணியை உறுதிப்படுத்துதல், தொகுதிப் பங்கிடுதல் என தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
இந்த நிலையில், சில கட்சிகள் இணைந்து கூட்டாகவும் சில கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன. ஒரு புறம் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப்.06) பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், மற்றொரு புறம் அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
அதிலும், குறிப்பாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும், எடப்பாடி பழனிசாமியையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், “ பொய்யான அறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர சமீபத்தில் வேறு எந்த கொள்கையும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இல்லை என்பதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். தினமும் அவர் ஏதேனும் ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் தமிழ்நாட்டு மக்களைத் திசைதிருப்பி வருவது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாக உள்ளது” எனத் தெரிவித்தார்.