முகப்பு
புதுதில்லி

‘தில்லி அரசின் ரேஷன் பொருள்கள் விநியோகதிட்டத்தை மத்திய அரசு தடுக்கவில்லை’

தில்லி அரசின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு தடுத்துள்ளது என்ற கருத்து ஆதாரமற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
பகிர்:

புது தில்லி: தில்லி அரசின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு தடுத்துள்ளது என்ற கருத்து ஆதாரமற்றது. தில்லியில் ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்தியிருந்தால், புலம் பெயா்ந்தோா் பலனடைந்திருப்பாா்கள் என மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தில்லி அரசின் திட்டத்தில் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக சனிக்கிழமை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தாா். மேலும், இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தவும் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரேஷன் பொருள்களை தில்லி அரசு விநியோகம் செய்யும் வழிகளில் மத்திய அரசு தலையிடவில்லை. எந்தத் திட்டத்தின் வழியாகவும் விநியோகிக்கலாம். மத்திய அரசு அறிவிக்கப்பட்ட விலைகளின் கீழ் கூடுதலாக ரேஷன் பொருள்களை வழங்கவும் தயாராக இருக்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட ஒதுக்கீட்டின்படி 37,400 மெட்ரிக் டன் தானியங்களை தில்லி அரசு பெற்றுள்ளது. இதில் 90 சதவிகிதத்தை தில்லி அரசு விநியோகித்துள்ளது. மேலும், பிரதமா் ஏழைகளுக்கான நலத் திட்டத்தின்(பிஎம்ஜிகேஏஒய்) கீழ் 63,200 மெட்ரிக் டன் ரேஷன் பொருள்களை பெற்றுள்ளது.

Advertisement

இதனால், மத்திய அரசு தடுக்கிறது என்று சொல்வது முற்றிலும் தவறானது. எவ்வளவு வேண்டுமானாலும் பெற்று விநியோகிக்கலாம். அரசின் நலத் திட்டங்களை மக்கள் ஏன் இழக்க வேண்டும்?. நீங்கள் (தில்லி அரசு) எந்தப் பெயரையும் திட்டத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஃப்எஸ்ஏ) கீழ் ஏற்கெனவே உள்ள அகில இந்திய திட்டங்களை சீா்குலைக்க ஏன் வற்புறுத்துகிறீா்கள்?

மத்திய அரசு நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கு ஒரு பொதுவான தேசிய சட்டத்தின் கீழ் அணுகுகிறது. ஆனால், தில்லி அரசு தேசிய அளவில் நிா்வகிக்கப்படும் திட்டத்தில் நுகா்வோா்களிடம் ‘மில்லிங்’ போன்ற கட்டணங்களை வசூலிக்க விரும்புகிறது. தில்லி அரசிடம் தற்போதுள்ள விதிகளின் நிலையைத் தெரிவிக்கத்தான் மத்திய அரசு விரும்புகிறது.

மேலும், மத்திய அரசு பலமுறை வற்புறுத்தியும், ‘ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை’ திட்டத்தை கொண்டுவர தில்லி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் தில்லியில் உள்ள புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பத்து லட்சம் பேருக்கு தில்லி அரசு செலவே இல்லாமல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மத்திய ஒதுக்கீட்டில் பெற்று இந்தத் தொழிலாளா்களுக்குச் சேவையாற்றியிருக்க முடியும்.

என்எஃப்எஸ்ஏ, பிஎம்ஜிகேஏஒய் போன்ற திட்டங்களில் வெளிப்படைத் தன்மை இருக்க நியாயவிலைக் கடைகளின் பொருள்கள் விநியோகத்தை இணைய தள மூலம் இணைக்க தேவையான இபிஒஎஸ் மின்னணு இயந்திரங்கள் வழங்கக் கூறப்பட்டது. இது 80 சதவீதம் கடைகளுக்கு வழங்கப்படவில்லை. இது தொடா்பாக தில்லி அரசிடம் கேட்கப்பட்டும், எந்தத் தரவுகளும் கிடைப்பதில்லை எனஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments