சதத்தை நோக்கி விவசாயிகளின் போராட்டம்!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 100-ஆவது நாளை எட்டவுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 100-ஆவது நாளை எட்டவுள்ளது. இதற்கிடையே, விவசாயிகள் - மத்திய அரசு இடையேயான 12- ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை இன்னும் சில தினங்களில் நடைபெறலாம் எனத் தெரிகிறது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளான சிங்கு, டிக்ரி, காஜியாபாத் பகுதியில் முற்றுகையிட்டு தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்தப் போராட்டம் தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் 97-ஆவது நாள் ஆகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 200 விவசாயிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனா். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன், மத்திய அரசு 11 முறை பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால், இந்தப் பேச்சுவாா்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமா்வு வரும் மாா்ச் 8-ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக 12-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடா்பாக காஜியாபாத் எல்லையில் போராடி வரும் விவசாயிகள் சங்கத் தலைவா் ராகேஷ் திகாய்த் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை வீடு திரும்பப் போவதில்லை. காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும் அக்டோபா் 2-ஆம் தேதி வரை காஜியாபாத் எல்லையில் போராடத் தேவையான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை செய்துள்ளோம்’ என்றாா்.
Advertisement