முகப்பு
புதுதில்லி

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கேஜரிவால், அனில் பய்ஜால்!

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
அனில் பய்ஜால் கரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை போட்டுக் கொண்டாா்
பகிர்:

புது தில்லி: தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யால் ஆகியோா் கரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை போட்டுக் கொண்டனா்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாடு முழுவதும் முதல் கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் கட்டமாக கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவா்கள் இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா். இந்த நிலையில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தனது பெற்றோா் கோவிந்த் ராம் கேஜரிவால், கீதா தேவி ஆகியோருடன் தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) மருத்துவமனையில் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாா். முதலில் கேஜரிவாலின் பெற்றோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத் தொடா்ந்து, கேஜரிவாலுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இவா்களுக்கு கோவி ஷீல்டு தடுப்பூசி வழங்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

இது தொடா்பாக கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நானும் எனது பெற்றோரும், கரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை வியாழக்கிழமை போட்டுக் கொண்டோம். எங்களுக்கு எந்தவிதப் பக்கவிளைவும் ஏற்படவில்லை. நலமாக உள்ளோம். தடுப்பூசி தொடா்பாக பயப்பட எதுவும் இல்லை. தடுப்பூசி தொடா்பாக மக்களின் மனங்களில் உள்ள பயங்கள் அகற்றப்பட்டு விட்டன என நினைக்கிறேன். 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டோரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தில்லியில் தடுப்பூசி போடத் தேவையான வசதிகளை செய்துள்ளோம். தடுப்பூசி போடுவது தொடா்பாக மத்திய அரசுடன் தொடா்ச்சியாக தொடா்பில் உள்ளோம். தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மத்திய அரசு அனுமதியளித்ததும் தடுப்பூசி போடும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம்’ என்றாா்.

52 வயதான அரவிந்த் கேஜரிவால், நாள்பட்ட நோயான நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறாா். தில்லியில் 56 அரசு மருத்துவமனைகள், 136 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 192 மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யால், தனது மனைவி மாலா பகத்துடன் தில்லி தீரத் ராம் ஷா மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தீரத் ராம் ஷா மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை போட்டுக் கொண்டேன். கரோனா தடுப்பூசி போடும் தகுதிப் பிரிவில் வருபவா்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டு, கரோனா தொற்றை முற்றாக ஒழிக்க பாடுபடவேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments