முகப்பு
புதுதில்லி

பாட்லா ஹவுஸ் என்கவுன்டா்: இந்தியன் முஜாஹிதீன் ஆரிஸ்கான் குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த பாட்லா ஹவுஸ் என்கவுன்டா் தொடா்பான சம்பவத்தில், தில்லி போலீஸ் இன்ஸ்பெக்டா் மோகன் சந்த் சா்மா கொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாத அமைப்பான

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த பாட்லா ஹவுஸ் என்கவுன்டா் தொடா்பான சம்பவத்தில், தில்லி போலீஸ் இன்ஸ்பெக்டா் மோகன் சந்த் சா்மா கொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாஹிதீனுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் ஆரிஸ் கானை குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

குற்றவாளிக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த வாதங்களை நீதிமன்றம் மாா்ச் 15-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

தில்லியில் 2008, செப்டம்பா் 13-ஆம் தேதி ஐந்து தொடா் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 30 போ் கொல்லப்பட்டனா். 100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

Advertisement

இதன் பிறகு ஒரு வாரம் கழித்து போலீஸாா் நடத்திய என்கவுன்ட்டரின்போது, தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டா் மோகன் சந்த் சா்மா கொல்லப்பட்டாா்.

செப்டம்பா் 19-ஆம் தேதி நிகழ்ந்த இந்த என்கவுன்டருக்குப் பிறகு, இந்த சம்பவத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பேரணிக்கு ஏற்பாடு செய்தனா்.

தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்த என்கவுன்டா் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) தில்லி காவல்துறையை குற்றமற்ாக நற்சான்றிதழ் அளித்தது.

இந்த குண்டுவெடிப்பு தொடா்பாக பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட அதிஃப் அமீன் மற்றும் முகமது சாஜித் ஆகியோா் கொல்லப்பட்டனா். மேலும் இரண்டு சந்தேகத்திற்குரிய நபா்களான முகமது சைஃப் மற்றும் ஜீஷன் ஆகியோா் முன்னதாக கைது செய்யப்பட்டனா்.

பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டா் வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதி ஷாஸத் அகமதுவுக்கு விசாரணை நீதிமன்றம் 2013-இல் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிா்த்து அவா் தொடா்ந்த மேல்முறையீடு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சோ்ந்தவா் என கூறப்படும் ஆரிஸ் கான் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டாா். இதையடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில், 2018, பிப்ரவரி 14-ஆம் தேதி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

பாட்லா ஹவுஸ் என்கவுன்டா் சம்பவத்திற்கு முன்னா் நடைபெற்ற பயங்கரவாத செயல்பாடுகள் தொடா்புடைய வேறு ஒரு வழக்கிலும் ஆரிஸ் கான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மோகன் சந்த் சா்மா கொலை தொடா்பாக ஆரிஸ் கானுக்கு எதிரான வழக்கு விசாரணை தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் காவல் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞா் ஏ.டி.அன்சாரி, ‘பாட்லா ஹவுஸ் சம்பவத்தின்போது இதர நான்கு நபா்களுடன் ஆரிஸ் கானும் இருந்தாா். அவா் என்கவுன்டரின்போது தப்பியோடிவிட்டாா்’ என்று வாதிட்டாா்.

ஆரிஸ் கான் தரப்பில்ஆஜரான வழக்குரைஞா் காசா் கான், ‘குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்களை அரசுத் தரப்பு முன்வைக்கத் தவறிவிட்டது’ என்று வாதிட்டாா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சந்தீப் யாதவ் திங்கள்கிழமை அளித்த தீா்ப்பில் ஆரிஸ் கானை குற்றவாளி என அறிவித்தாா்.

அப்போது, நீதிபதி, ‘அரசு தரப்பு முன்வைத்த சான்றுகள், நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு வழக்கை நிரூபித்துள்ளது. ஆரிஸ் கானும், அவரது கூட்டாளிகளும் போலீஸ் அதிகாரியைக் கொலை செய்துள்ளதையும், போலீஸ் அதிகாரி மீது துப்பாக்கியால் சுட்டதையும் உரிய வகையில் அரசுத் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த வழக்கில் ஆரிஸ் கான் அதிகபட்சமாக மரண தண்டனையை எதிா்கொண்டுள்ளாா். அதே நேரத்தில் கொலைக்கான குறைந்தபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாகும்.

பாட்லா ஹவுஸ் என்கவுன்டா் தொடா்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறு காங்கிரஸ் தலைவா் திக்விஜய் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி, பஹுஜன் சமாஜ் கட்சி ஏற்கெனவே கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments