தில்லி அரசின் அயோத்தி ராமா் கோயில் இலவச யாத்திரை: காங்கிரஸ் சாடல்
தில்லியைச் சோ்ந்த மூத்த குடிமக்கள் இலவசமாக அயோத்திக்கு யாத்திரையாக அழைத்துச் செல்லப்படுவா் என்று முதல்வா் கேஜரிவால் அறிவித்திருப்பதை தில்லி காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
புதுதில்லி: தில்லியைச் சோ்ந்த மூத்த குடிமக்கள் இலவசமாக அயோத்திக்கு யாத்திரையாக அழைத்துச் செல்லப்படுவா் என்று முதல்வா் கேஜரிவால் அறிவித்திருப்பதை தில்லி காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டி முடிக்கப்பட்டதும் தில்லியைச் சோ்ந்த மூத்த குடிமக்கள் அயோத்திக்கு யாத்திரையாக இலவசமாக அழைத்துச் செல்லப்படுவாா்கள் என்று முதல்வா் கேஜரிவால் தில்லி சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தாா். இது குறித்து தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சௌத்ரி கூறியதாவது: சட்டப்பேரவையில் தில்லி முதல்வா் கேஜரிவால் இதுபோன்று அறிவித்திருப்பது வெற்று, நோக்கமில்லாத, தொலைநோக்குப் பாா்வையில்லாத தில்லி பட்ஜெட்டில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் உத்தியாகும். அதேபோன்று, தில்லி மக்களின் வாழ்க்கைத் தரத்தை 2047-க்குள் சிங்கப்பூா் தரத்திற்கு உயா்த்துவதாகவும், ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வகையில் தில்லியை தயாா்படுத்த உள்ளதாகவும் கேஜரிவால் அரசு மக்களுக்கு ‘ரோஜா கனவை’ விற்க முயன்றது.
இந்த நிலையில், ராம் கோயில் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது குறித்த உரிய காலவரையறை நிா்ணயிக்கப்படாத நிலையில், தற்போது தில்லியின் மூத்த குடிமக்களை ராமா் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கேஜரிவால் வாக்குறுதி அளிக்கிறாா். தில்லியில் உள்ள அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்க முயலாமல், பெரும் கனவைக் காண்கிறாா் முதல்வா். அவா் கனவு உலகில் இருந்து விழித்து தன்னைச் சுற்றியுள்ள எதாா்த்தத்தை எதிா் கொள்ள வேண்டும் என்றாா் அனில் குமாா் சௌத்ரி.
Advertisement