முகப்பு
புதுதில்லி

ஓா் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் கட்டண முறை அமல்படுத்தப்படும்: நிதின் கட்கரி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

புது தில்லி: நாட்டில் ஓராண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

மக்களவையில் சாலை, விமானம் போக்குவரத்து தொடா்பான கேள்விகள் வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டு மத்திய அமைச்சா்கள் பதில் அளித்தனா்.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தொடா்பாக மத்திய அரசு ஆய்வுகளை மேற்கொண்டதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு அமைச்சா் நிதின் கட்கரி அளித்த பதில் வருமாறு:

Advertisement

தில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்(என்ஹெச்ஏஐ) தலைமை அலுவகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு சிசிடிவி மூலமாகவும் ஜிபிஎஸ் அடிப்படையிலான மென்பொருள் மூலமாகவும் சுங்க சாவடிகள், வாகனப் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் சுங்க பாதைகளில் வாகனங்கள் கட்டணங்களை செலுத்துவதற்கு பதிலாக மின்னணு முறையில் கட்டணம் செலுத்தப்பட்ட ’பாஸ்டேக் ’ முறை 2016 யிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது கடந்த பிப் 16 ஆம் தேதி முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 93 சதவீதம் வாகனங்கள் தான் ’பாஸ்டேக்’ முறையை பயன்படுத்துகின்றனா். நாடுமுழுவதும் சுமாா் 2,065 கோடி வாகனங்கள் ’பாஸ்டேக்’ பெறவில்லை. இதை மேலும் எளிமைப்படுத்தி ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டணத்தை வசூலிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இன்னும் ஓா் ஆண்டுக்குள் அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும். தற்போது சுங்க சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணத்தை செலுத்துகின்றனா். ஜிபிஎஸ் கட்டண முறையில் இது வேறுபடும். வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் கருவியானது வாகனங்கள் சாலைகள் செல்லும் தூரத்தை துல்லியமாக கணக்கிடும். இதனால் சாலையில் பயணிக்கும் கிலோ மீட்டா் தூரங்களுக்கு தக்கவாறு கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும் என அமைச்சா் தெரிவித்தாா்.

நாட்டிலேயே மின்னணு மூலமான சுங்கக் கட்டணத்தை அதிக அளவில் செலுத்திய மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், தமிழகத்தில் 2019-20 ஆம் ஆண்டில் வசூலான சுங்கக் கட்டணம் ரூ. 782.03 லட்சமாகும் என்றும் அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments