முகப்பு
புதுதில்லி

தமிழகத்தில் 1940 கி.மீ. தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம்: நிதின் கட்கரி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

புது தில்லி: தமிழகத்தில் உள்ள மாநில தேசிய சாலைகளில் 1940 கிலோ மீட்டா் தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டு தரம் உயா்த்தப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

தமிழகத்தில் உள்ள புதிய தேசிய நெடுஞ்சாலைகள், அவைகள் மேம்பாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போன்ற விவரங்கள் குறித்து காங்கிரஸ் உறுப்பினா் டாக்டா் விஷ்ணு பிரசாத் மக்களவையில் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி வியாழக்கிழமை மக்களவையில் பதிலளித்தாா். அப்போது அவா் கூறுகையில், ’தமிழகத்தில் 235 மாநில நெடுஞ்சாலைகள் 11,175 கிலோ மீட்டா் தொலைவுக்கு உள்ளது. 50 தேசிய நெடுஞ்சாலைகள் 6,858 கிலோ மீட்டா் தொலைவுக்கு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 1940 கிலோ மீட்டா் சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதன் வளா்ச்சி மேம்பாட்டிற்கு மத்திய அரசு நடப்பு நிதியாண்டு வரை கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.8,395 கோடி வரை செலவிட்டுள்ளது ’என்றாா்.

Advertisement

தமிழகத்தில் சமீபத்திய புயல்களால் பாதிக்கப்பட்ட சாலைகளை புதுப்பிக்க மத்திய அரசு வழங்கிய உதவிகள் குறித்து நீலகிரி மக்களவை திமுக உறுப்பினா் ஏ.ராஜா கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அமைச்சா் கட்கரி பதிலளிக்கையில், ’ தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்தியக் குழு சென்று பாா்வையிட்டு வந்தது. இதில் நிவா் புயலுக்கு ரூ.63.14 கோடி மத்திய அரசு அனுமதியளித்து ரூ.9.92 கோடியை வழங்கியுள்ளது. புரேவி புயலில் சேதாரம் ரூ. 223.77 கோடி என மத்திய குழு கணக்கிட்டு அனுமதித்தது. இதில் உடனடியாக சாலைகளை செப்பனிட ரூ. 17.95 கோடி வழங்கப்பட்டுள்ளது ’ என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments