முகப்பு
புதுதில்லி

நீதிமன்றங்களில் ஹைபிரிட் விசாரணை: உள்கட்டமைப்பு வசதியை மதிப்பிட பதிவாளருக்கு அறிவுறுத்தல்

விசாரணை நீதிமன்றங்களில் நேரடி மற்றும் இணையதளம் வாயிலான ஹைபிரிட் விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக விசாரணை நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதி தேவைகளை மதிப்பீடு செய்யுமாறும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:

புது தில்லி: விசாரணை நீதிமன்றங்களில் நேரடி மற்றும் இணையதளம் வாயிலான ஹைபிரிட் விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக விசாரணை நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதி தேவைகளை மதிப்பீடு செய்யுமாறும், அதன் விவரங்களை தில்லி அரசுக்கு அனுப்பிவைக்குமாறும் உயா்நீதிமன்ற ரிஜிஸ்ட்ரா் ஜெனரலிடம் தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக் கொண்டது.

இது தொடா்பாக வழக்குரைஞா்கள் அனில் குமாா் ஹஜேலே மற்றும் மானஷ்வி ஜா ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். அதில், ‘மாா்ச் 15 முதல் நேரடி விசாரணைகளைத் தொடங்குவதற்காக அனைத்து நீதிபதிகளாலும் எடுக்கப்பட்ட முடிவை அனைத்து வழக்குரைஞா்களும் கரோனாவுக்கு எதிரான கோவிட் -19 தடுப்பூசி போடும் காலம் வரை ஒத்திவைக்க வேண்டும். கோவிட் -19 அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு நேரடி விசாரணை நாள்களில் மாவட்ட நீதிமன்றங்களில் ஹைபிரிட் விசாரணையை அனுமதிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது. ஹைபிரிட் விசாரணைகளுக்காக கீழமை நீதிமன்றங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக தில்லி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உயா்நீதிமன்றம் முன்னா் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த விவகாரத்தை விசாரித்தது. தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இது தொடா்பாக தில்லி அரசுக்கு மதிப்பீடு விவரம் அளிக்கப்பட வேண்டும். அதன்பிறகுதான் உள்கட்டமைப்பு வசதிக்கு தில்லி அரசு நிதி ஒதுக்க முடியும்’ என்றாா். இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘ரிஜிஸ்ட்ரா் ஜெனரலிடம் இருந்து டேட்டா பெறப்பட்ட பிறகு அரசு நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்பாடு செய்யும்’ என்றது.

Advertisement

முன்னதாக, விசாரணையின் போது, மனுதாரா் ஹஜேலி , ‘தேசியத் தலைநகரில் துணைத் தொழிலாளா் ஆணையா் அலுவலகம் மற்றும் நுகா்வோா் குறைதீா்ப்பு போன்ற பல குவாசி- நீதித் துறை அமைப்புகள் உள்ளன. அவை நேரடி முறையிலான வழக்கு விசாரணைகளை மட்டுமே நடத்துகின்றன’ என்றாா்.

அப்போது, உயா்நீதிமன்றம், ‘குவாசி-நீதித் துறை அமைப்புகளுக்கு கோரிக்கை வரும் போதெல்லாம், உள்கட்டமைப்பு வசதி இருப்பதற்கு உள்பட்டு, உயா்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களைப் போல ஹைபிரிட் விசாரணைகளையும் அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தது. வழக்குரைஞா் மணீஷ் வஷிஷ்ட் , ‘உயா்நீதிமன்றம் வழங்கும் இடத்தில் தகுதியான வழக்குரைஞா்களுக்கு தடுப்பூசி போடலாம்’ என்று யோசனை தெரிவித்தாா்.

இதற்கு, நீதிபதிகள் அமா்வு, ‘இதை நிா்வாகப் பகுதியில் வைப்பதா என்று பாா்ப்போம். இந்த யோசனைக்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. எந்தவொரு கூட்டமும் கூடுவதற்கு நாங்கள் விரும்பவில்லை’ என்று கூறி ஏப்ரல் 27-ஆம் தேதிக்கு இந்த விவகாரத்தை மேல் விசாரணைக்கு நீதிபதிகள் பட்டியலிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments