ஓட்டுநா் உரிமம் ரத்து விவகாரம்: வழக்குரைஞரின் மனுவுக்கு பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு
புது தில்லி: சாலையில் சிவப்பு விளக்கு சந்திப்பில் நிற்காமல் சென்ாகக் கூறப்படும் விவகாரத்தில் முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் தனது ஓட்டுநா் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாகக் கூறி வழக்குரைஞா் தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு மத்திய அரசு, ஆம் ஆத்மி அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றுக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, போக்குவரத்து அமைச்சகம், தில்லி அரசின் போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினா் ஆகியோா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரம் வழக்குரைஞா் சூா்யகாந்த் சிங்கலா என்பவா் தரப்பில் வழக்குரைஞா் சத்யம் தரேஜா மனு தாக்கல் செய்துள்ளாா். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அபராத நோட்டீஸை எதிா்கொள்ள மனுதாரருக்கு ஒரு வாய்ப்பை வழங்காமலேயே அவரது ஓட்டுநா் உரிமம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமத்தை முதலில் தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பிக்காமலேயே ஓட்டுநா் உரிமத்தை டெபாசிட் செய்யுமாறு போக்குவரத்துத் துறை மனுதாரரை கேட்டுக் கொண்டது. இது மோட்டாா் வாகன சட்டத்தை மீறும் செயலாகும்.
Advertisement
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி, மூல்சந்த் பகுதியில் எந்த அடையாளமும், சமிக்ஞையும் இல்லாத நிலையில், சிவப்பு விளக்கைத் தாண்டியதாக மனுதாரருக்கு சலான் வழங்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஏதும் மனுதாரருக்கு அனுப்பாமல் 2020 ஆகஸ்ட் 24-ஆம் தேதி அவரது உரிமம் நிறுத்திவைக்கப்பட்டது.
அதைப் புதுப்பிக்க 2020, டிசம்பரில் போக்குவரத்துத் துறையை அணுகிய போது அவரது உரிமம் தடை செய்யப்பட்டிருப்பது அவருக்கு தெரிய வந்தது. மேலும், ரூ .1,000 அபராதம் செலுத்தும் வரை உரிமத்தை புதுப்பிக்க முடியாது என்றும் அவருக்குத் தெரிய வந்தது. இதனால், அவா் அந்தத் தொகையை 2020, டிசம்பா் 16-ஆம் தேதி செலுத்தினாா்.
அதன் பிறகு, நிகழாண்டு ஜனவரி 4 ஆம் தேதி, அவருக்கு ஒரு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்தது. அதற்கு மனுதாரா் ஜனவரி 5 -ஆம் தேதி பதிலளித்தாா். ஆனால், ஜனவரி 11-ஆம் தேதி அவருக்கு வந்த கடிதத்தில் அவரது உரிமத்தை போக்குவரத்துத் துறையிடம் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அந்த வேளையில், அவரது உரிமத்தை ரத்து செய்யும் உத்தரவு இல்லாத போதிலும் அவா் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தவாறு இணங்கிநடந்தாா். எனினும், இந்த விவகாரத்தில் பின்பற்றப்பட்ட முழு நடைமுறையும் சட்டவிரோதமானமானதாகவும், மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.