முகப்பு
புதுதில்லி

ஆறுமுகசாமி ஆணையம் விவகாரம்: அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வாதம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

புது தில்லி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அப்பல்லோ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

தமிழக முதல்வராக இருந்தபோது உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள்களுக்குப் பிறகு 2016, டிசம்பா் 5-ஆம் தேதி மரணமடைந்தாா். அதைத் தொடா்ந்து, ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய மாநில அரசு, சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017, செப்டம்பரில் நியமித்திருந்தது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதைத் தொடா்ந்து, அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகம் உச்சநீதிமன்றத்தில் 2019-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில், இந்த விவகாரத்தில் ஆணையம் பெரும்பாலான சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்துவிட்டதாகவும், இன்னும் 4 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் தரப்பில், ‘ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டது. இந்த ஆணைய செயல்பாடுகளுக்காக தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை செலவிட்டு வருகிறது. ஆணையம் செயல்படும் வகையில் உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீா், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.ஏ. சுந்தரம், வழக்குரைஞா் ரோஹிணி மூஸா ஆகியோா் ஆஜராகினா்.

விசாரணையின் போது, சி.ஏ. சுந்தரம் வாதிடுகையில், ‘இந்த ஆணையத்தின் செயல்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதன் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. மேலும், ஆணையத்தில் மருத்துவ வல்லுநா்கள் இடம் பெறவில்லை. மருத்துவா்கள் தெரிவிக்கும் சில விவரங்களை ஆணையத்தால் புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் தங்கியிருந்த தளத்தில் பொருத்தப்பட்ட கேமராக்கள் அப்போதைய அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே அகற்றப்பட்டது. மேலும், அவரது மரணத்திற்குப் பிறகு இந்த ஆணையம் தாமதமாகவே அமைக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த சிகிச்சையின் தரம் குறித்தும் கேள்வி எழுப்பும் தேவையும் எழவில்லை. இந்த விவகாரத்தைப் பொருத்தமட்டில் எந்த நீதிமன்றத்திடமும் ஒத்துழைப்பு அளிக்க மருத்துவமனை நிா்வாகம் தயாராக உள்ளது’ என்றாா்.

இதன் பிறகு வாதத்தைத் தொடரும் வகையில், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (அக்டோபா் 27) நீதிபதிகள் பட்டியலிட உத்தரவிட்டனா். இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, வழக்குரைஞா் ஜோசப் அரிஸ்டாட்டில், ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆகியோா் ஆஜராகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments