வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு: உமா் காலித் தரப்பில் புதிய ஜாமீன் மனு
வட கிழக்கு தில்லி வன்முறை சம்பவத்தில் சதித் திட்டம் தீட்டிய வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
வட கிழக்கு தில்லி வன்முறை சம்பவத்தில் சதித் திட்டம் தீட்டிய வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உமா் காலித், தாக்கல் செய்த ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது. மேலும், புதிதாக வேறு ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக தில்லி பல்கலைக்கழக முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித் உள்ளிட்ட பலரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் மீது சட்டவிரோதத் தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி உமா் காலித் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் நடைபெற்றது.
அப்போது உமா் காலித் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் திரிதீப், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 439-ஆவது பிரிவின் கீழ் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மாற்றாக 437- ஆவது பிரிவின்கீழ் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸாா் ஆட்சேபித்ததைத் தொடா்ந்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினாா்.
Advertisement
காவல் துறையின் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞா் அமீத் பிரசாத் புதிதாக மனு தாக்கல் செய்வதற்கு ஆட்சேபம் தெரிவித்தாா். அவா் வாதிடுகையில், ‘இந்த மனுவானது குற்றம்சாட்டப்பட்டவா் தரப்பில் விசாரணையை தாமதப்படுத்துவதற்கான ஒரு உத்தியே தவிர, நியாயமானதாக தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பு மூலம் ஏற்கெனவே ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இது தாமதத்திற்கான ஒரு உத்திதான்’ என்றாா். ஜாமீன் மனுவை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம், சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டதாகும். ஆகவே, குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகள் 437 பிரிவின் கீழ் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன், செயல்படுத்தும் அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்றும் அமீத் பிரசாத் கூறினாா்.
இதையடுத்து, புதிய மனு உமா் காலித் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் புதிய மனு மீது காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பா் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். கடந்த செப்டம்பா் 3- ஆம் தேதி ஜாமீன் மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது, உமா் காலித் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த வழக்கில் போலீஸாா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையில் அடிப்படையில் இல்லாமல் மிகைப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளானது இணையதள தொடா்கள் மற்றும் செய்தி சேனல்களில் இருந்து பெறப்பட்ட ஒரு கதை போல உள்ளது என்று வாதிடப்பட்டது. முன்னதாக போலீஸ் தரப்பில் வாதிடுகையில், குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. இதனால், இந்த மனுவில் எந்தவிதத் தகுதியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.