பாஜக ஆட்சியில் கேரளம் புதிய உச்சங்களைத் தொடும்: பிரதமர் மோடி உறுதி
கேரளத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் புதிய உச்சங்களை மாநிலம் தொடும் என்று பிரதமர் மோடி உறுதி
கேரளத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் புதிய உச்சங்களை மாநிலம் தொடும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
கேரள மாவட்டம், பத்தனம்திட்டாவில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "கேரளத்தில் மே 4 ஆம் தேதியில் பல ஆண்டுகால தவறான ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை மாநிலத்திலிருந்து வழியனுப்புவதற்கான காலம் தொடங்கி விட்டது. கேரளத்தில் முதன்முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவிருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்த சமூகத்தினர்தான் அதிகளவில் உள்ளனர். அங்கே ஒரு மாநிலத்தைத் தவிர, 7 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி செய்கிறது. கிறிஸ்தவ சமூகத்தினர் இருக்கும் கோவாவிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியே நடைபெற்று வருகிறது.
Advertisement
பாஜக ஆட்சியில் வளர்ச்சியின் உச்சங்களைத் தொட்டு வரும் கோவாபோல, கேரளத்திலும் ஆட்சியமைந்தா, கேரளமும் வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொடும்.
இங்குள்ள சபரிமலை ரயில்வே திட்டத்தை மாநில அரசு கிடப்பில் போட்டுள்ளது. ஆனால், சபரிமலைக்கு நேரடி இணைப்பை மேம்படுத்துவதுடன், உள்ளூர் வர்த்தகத்துக்கு புதிய வேகமும் கிடைக்கும். இதனால், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சி வரும்போது, இதுபோன்ற அனைத்துத் தடைகளும் நீக்கப்படும்" என்று தெரிவித்தார்.