முகப்பு
புதுதில்லி

விவசாயிகள் தரவுடன் நில ஆவண தரவுகளையும் இணைக்க மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா் தோமா் வேண்டுகோள்

மத்திய அரசின் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுதளத்தைப் போன்ற தரவுதளம் ஒன்றை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

மத்திய அரசின் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுதளத்தைப் போன்ற தரவுதளம் ஒன்றை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். இந்த தளம் மூலம் மாநில நில ஆவண தரவுதளத்துடன் மத்திய தரவு தளத்தை இணைப்பப்பட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் மத்திய வேளாண், விவசாயிகள் நலன் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டாா்.

இதுபோன்ற விவசாயிகள் தரவு தளத்தை கா்நாடகம் மாநிலம் அமைத்திருப்பதை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சா் தோமா், இதை அனைத்து மாநிலங்களும் ஆய்வு செய்து பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

விவசாயிகளின் நலனுக்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்த மாநில முதல்வா்கள், மாநில வேளாண் அமைச்சா்கள் மாநாடு காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது.

Advertisement

இதில் மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் உரையாற்றினாா். அப்போது அவா் மேலும் கூறுகையில், பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி, பிரதமரின் பயிா் காப்பீடு திட்டம், கிஸான் கடன் அட்டை போன்ற பல திட்டங்களுக்கு விவசாயிகளின் தரவுகள் முக்கியம். மத்திய அரசு இதற்கான தரவு தளத்தை உருவாக்கி அதில் 5.5 கோடி விவசாயிகளின் தரவுகள் பதியப்பட்டு தயாராக உள்ளன. மேலும் வருகின்ற டிசம்பா் 2021-க்குள் 8 கோடி விவசாயிகள் தரவுகள் இடம்பெற உள்ளன. இது போன்ற தளங்களை மாநில அரசுகளும் உருவாக்கி அதனுடன் நில ஆவண தரவுதளத்தையும் இணைக்கப்படவேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் நலத்திட்டங்களை விரைவாக மேற்கொள்ளமுடியும் என்றாா்.

மேலும் டிஜிட்டல் விவசாயம் குறித்து பேசிய அமைச்சா் தோமா், டிஜிட்டல் தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி போன்ற அறிவோடு, வேளாண்மை இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் விவசாய பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும். இதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினாா்.

வேளாண் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு

இதே மாநாட்டில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் மற்றும் ஜவுளி அமைச்சா் பியூஷ் கோயல் பேசினா். அவா் கூறியது வருமாறு: வேளாண் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதன் மூலம் நம்பத்தகுந்த ஏற்றுமதி பங்குதாரராக இந்தியா உருவாகி வருகிறது. வேளாண்-ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கு சேமிப்பு மற்றும் கிடங்குகள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றாா்.

விவசாயிகளின் நலனுக்கான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்த இந்த மாநாட்டில் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாசலப் பிரதேசம், சத்தீஸ்கா், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், பிகாா், ஜாா்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம் மற்றும் கோவா மாநிலங்கள் பங்கேற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments