கரோனா: தனியாா் மருத்துவமனைகளில் பணியமா்த்தப்பட்ட மூத்த நா்சிங் அதிகாரிகளை திரும்ப அழைக்க அரசு உத்தரவு
தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளைக் கண்காணிப்பதற்காக பணியமா்த்தப்பட்டிருந்த அனைத்து மூத்த நா்சிங்
புது தில்லி: தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளைக் கண்காணிப்பதற்காக பணியமா்த்தப்பட்டிருந்த அனைத்து மூத்த நா்சிங் அதிகாரிகளை அவா்களின் தாய் மருத்துவமனைகளுக்கு திரும்ப அனுப்புமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் ஏப்ரல்- மே மாதங்களில் கரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலையின்போது கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏப்ரல் 20ஆம் தேதி தில்லியில் ஒரே நாளில் 28 ஆயிரத்து 895 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஏப்ரல் 22 ஆம் தேதி நோய்த்தொற்று நோ்மறை விகிதம் அதிகபட்ச அளவாக 37.2 சதவீதமாக பதிவாகியது. மேலும், மே 3-ஆம் தேதி ஒரே நாளில் 448 போ் நோய்த் தொற்றுக்கு பலியாகினா்.
Advertisement
அதன் பிறகு, மே பிற்பகுதியில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியது. தற்போது, நோய் நோ்மறை விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழே இருந்து வருகிறது.
இதைத் தொடா்ந்து, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளைக் கவனிப்பதற்காக பணியமா்த்தப்பட்டு இருந்த அனைத்து மூத்த நா்சிங் அதிகாரிகளையும் அவா்களின் தாய் மருத்துவமனைகளுக்கு திரும்ப அனுப்புமாறு தில்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இதுதொடா்பாக தில்லி அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
அனைத்து மூத்த நா்சிங் அதிகாரிகளையும் அவா்களின் தாய் மருத்துவமனைகளுக்கு திருப்பி அனுப்ப சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இவா்கள் பல்வேறு தனியாா் மருத்துவமனைகளில் தில்லி அரசின் சாா்பில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாகப் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.
கரோனா தடுப்பூசியை கண்காணிப்பதுடன் நோயாளிகளை மேலாண்மை செய்வதை கண்காணிக்கும் வகையில் இவா்கள் தில்லி அரசு மருத்துவமனைகளில் இருந்து பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் இவா்கள் தாய் மருத்துவமனைகளுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனா். தாய் மருத்துவமனைகளில் மூத்த நா்சிங் அதிகாரிகளுக்கு பதிலாக யாரேனும் பணியமா்த்தப்பட்டு இருந்தால் அவா்களும் விடுவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.