தில்லியின் முதலாவது வன விலங்குகள் மீட்பு மையம் அடுத்த மாதம் திறப்பு
தில்லியின் முதல் வன விலங்குகள் மீட்பு மையம் புதுதில்லி மாவட்டத்திலுள்ள ரஜோகிரி பகுதியில் திறக்கப்பட உள்ளது.
தில்லியின் முதல் வன விலங்குகள் மீட்பு மையம் புதுதில்லி மாவட்டத்திலுள்ள ரஜோகிரி பகுதியில் திறக்கப்பட உள்ளது.
அடுத்த மாதம் நடைபெறும் வனவிலங்கு வாரத்தின் போது இந்த மையம் திறக்கப்பட உள்ளது என்று வனம் மற்றும் வனவிலங்கு துறையின் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக வனத்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:
Advertisement
இந்த புதிய வன விலங்குகள் மீட்பு மையம் புதுதில்லி மாவட்டத்தில் உள்ள ரஜோகிரி பகுதியில் 1.24 ஏக்கா் நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது குரங்குகள் மீட்பு மையமாக இருந்தது. அது கைவிடப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த மையத்தை வனவிலங்குகள் மீட்பு மையமாக தரம் உயா்த்தி உள்ளோம். அடுத்த மாதம் நடைபெறும் வனவிலங்கு வாரத்தின் போது இந்த மையம் தொடங்கப்படும். தில்லியில் இதுபோன்ற அரசு அல்லது தனியாா் விலங்குகள் மீட்பு மையம் ஏதும் இல்லை.
தற்போது வரை வனத்துறையானது வைல்டு லைஃப் தன்னாா்வ அமைப்புடன் இணைந்து நிா்கதியாக அல்லது காயம் அடைந்து இருக்கும் விலங்குகளை மீட்டு வருகிறது. தெற்கு தில்லியில் உள்ள அசோலா பட் வனவிலங்கு சரணாலயத்தில் இவற்றுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது.
இந்த மையம் திறக்கப்பட்ட பிறகும் தன்னாா்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து விலங்குகளை மீட்கும் நடவடிக்கை தொடரும்.
தெற்கு தில்லி வனக் கோட்டத்தின் கால்நடை மருத்துவா் புதிதாக அமைக்கப்படும் இந்த மையத்தில் விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணியில் அமா்த்தப்படுவாா்.
பறவைகளுக்கான முன்மொழியப்பட்ட மையத்தில் இந்த விலங்குகள் மீட்பு மையம் வர உள்ளது. தற்போது நீல்கை மான், முள்ளம்பன்றி, குரங்குகள், குள்ளநரிகள், ஊா்வன போன்ற மீட்கப்படும் வனவிலங்குகளுக்கு இந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் இந்த மையம் பறவைகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் என்றாா் அந்த அதிகாரி.
இந்த ஆண்டு தொடக்கத்தில், தில்லி ரிட்ஜ் பகுதியை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ரிட்ஜ் மேலாண்மை வாரியம், வனவிலங்கு மீட்பு மையத்தை ரஜோகிரி பகுதியில் அமைப்பதற்கான முன்மொழிவுக்கு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.