மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!
மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியது குறித்து...
மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே மேற்கு வங்கத்தில் ஆளும் அரசான மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே முரண்பாடான நிலை காணப்படுகிறது.
முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறையில் உயிருள்ள வாக்காளர்கள் உயிரிழந்ததாக தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து மம்தா பானர்ஜி தொடர் போராட்டம் நடத்தியிருந்தார். அண்மையில், தேர்தல் ஆணையத்தால் அதிக எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
Advertisement
இதுமாதிரியான சிக்கல்கள் தொடர்ந்துவரும் நிலையில், கடந்த மார்ச் 28 ஆம் தேதி 4,660 துணை வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான முன்மொழிவை மேற்கு வங்க தலைமை தேர்தல் அலுவலர் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களின் வசதியை மேலும் எளிதாக்கும் வகையில் 4,660 துணை வாக்குச் சாவடிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அருகில் இந்தத் துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
இதன்மூலம், மேற்கு வங்கத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 85,379 ஆக உள்ளன. மேலும் 321 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக வாக்காளர்களுக்கு முறையான தகவல்களைக் கொண்டுசேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.