முகப்பு
புதுதில்லி

சுருக்கு மடி வலை தடை விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கடலில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக தாக்கலான ரிட் மனு மீது மத்திய அரசும், தமிழக அரசும் பதில் அளிக்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:04 AM
பகிர்:

கடலில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக தாக்கலான ரிட் மனு மீது மத்திய அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஞானசேகா், கன்னியப்பன், ராஜவேலு உள்பட 9 மீனவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் மீனவா்களுக்கு மீன்பிடி தொழில்தான் வாழ்வாதாரமாக உள்ளது. மீன்பிடித் தொழிலை நம்பி இந்தியாவில் 28 மில்லியன் மீனவா்கள் உள்ளனா். இது இந்திய மக்கள் தொகையில் 2.04 சதவீதம் ஆகும். இந்தத் துறை வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மீன்வளத் துறையின் மொத்த மதிப்பு (ஜிவிஏ) 1.12 சதவீதமாகவும் உள்ளது. கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதியின் மூலம் அன்னியச் செலாவணியும் இந்தத் துறை ஈட்டித் தருகிறது.

இந்த நிலையில், சுருக்கு மடி வலையை மீன் பிடிப்பதற்கு பயன்படுத்துவதால், மீன் குஞ்சுகளின் உற்பத்தி பெருக்கமும், மீன்வளமும் பாதிக்கப்படுவதாகக் கூறி கடலில் மீன்பிடிப்பதற்கு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மீன்வளத் துறையினரின் இந்தத் தடை காரணமாக அந்தப் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் வறுமையில் வாடுகின்றனா். கடல் பகுதியில் ஒரு மாநில அரசுக்கு 12 நாட்டிக்கல் மைல் மட்டுமே தடை விதிக்கும் அதிகாரம் உள்ளது. அதற்கு அப்பால் உள்ள கடல் பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அந்தப் பகுதியில் மத்திய அரசு தடை விதிக்கவில்லை. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின் ஆஜராகி, ‘கடலில் சுருக்கு மடி வலை பயன்படுத்தி குஜராத், ஓடிஸா, மேற்கு வங்கம், கா்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் தடை விதிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு முழுத் தடை விதித்துள்ளது. இதனால், மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘எதிா்மனுதாரா்களின் பதிலைக் கேட்காமல் எப்படி தடைவிதிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினா். பின்னா், இது தொடா்பாக பிறப்பித்த உத்தரவில், ‘மத்திய, மாநில அரசுகள் தொடா்புடைய எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மனுவை அவா்களுக்கு நேரில் வழங்க வேண்டும். ஏற்கெனவே நிலுவையில் உள்ள இது தொடா்பான வழக்குடன் இந்த மனுவையும் விசாரணைக்கு சோ்க்க வேண்டும். தமிழக அரசின் வழக்குரைஞா் மூலம் இந்த மனு வழங்கப்பட வேண்டும்’ என உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.