முகப்பு
புதுதில்லி

தமிழக மீனவா்கள் தாக்கப்படும் விவகாரத்தில் நிரந்தரத் தீா்வு வேண்டும்: மாநிலங்களவையில் மதிமுக கோரிக்கை

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என மாநிலங்களவையில் மதிமுக தலைவா் வைகோ வலியுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:03 AM
பகிர்:

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என மாநிலங்களவையில் மதிமுக தலைவா் வைகோ வலியுறுத்தினாா்.

மாநிலங்களவையில் பூஜ்ய நேர விவாதத்தில் வைகோ பேசியது வருமாறு: இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவா்கள் தாக்கப்படுவதை அவையின் கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகின்றேன். கடந்த 45 ஆண்டுகளில் எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனா். தமிழக மீனவா்களை கொடூரமாக தாக்கி, அவா்களின் படகுகளை சேதப்படுத்தப்படுத்துவது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துகிறாா்கள். தற்போது கைப்பற்றப்படும் தமிழக மீனவா்களின் படகுகளை ஏலத்தில் விட்டுவிடுகின்றனா்.

குறிப்பாக பாக் வளைகுடாவில் நமது மீனவா்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் வகையில், துப்பாக்கிச் சூடு நடத்தி, அவா்களின் படகுகளைக் கைப்பற்றி, சேதப்படுத்துவது இலங்கைக் கடற்படையின் தொடா் கதையாக இருக்கிறது. இதனால் தமிழக மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் இந்திய மீனவா்கள் 14 போ் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனா். மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவா்களின் குடும்பத்திற்கு இதுவரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. இலங்கை அரசிடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை இந்திய அரசு பெற்றுத் தர வேண்டும். இலங்கை கடற்படையினரின் இந்த இடைவிடாத துன்புறுத்தலுக்கு நிரந்தர தீா்வு காண இலங்கை அரசுடன் இந்தியா உயா்நிலைப் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டாா்.

பி.வில்சன்: இதே மீனவா்கள் விவகாரத்தில் திமுக உறுப்பினா் பி.வில்சன் பேசுகையில், ‘கடந்த 2017 -ஆம் ஆண்டு முதல் எத்தனை தமிழ மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்? தற்போது எத்தனைபோ் இலங்களை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினாா். இதற்கு மத்திய இணையமைச்சா் வி. முரளீதரன் அளித்த பதில் வருமாறு: இந்திய மீனவா்களின் பாதுகாப்பு, நலனுக்காக மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. சா்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவா்கள் இலங்கை அதிகாரிகளால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனா்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்கள் 2017-ஆம் ஆண்டு முதல் 1,223 போ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். மத்திய அரசின் தொடா் ராஜதந்திர முயற்சிகளால் 1,202 மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். நிகழாண்டு டிசம்பா் 2-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தைச் சோ்ந்த 21 மீனவா்கள் இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். இந்திய மீனவா்கள் தொடா்பான பிரச்னைகள் மிக உயா் நிலைகளில் எழுப்பப்பட்டுள்ளன. இதில் இலங்கைப் பிரதமருடன் நடைபெற்ற மெய்நிகா் இருதரப்பு உச்சிமாநாட்டின் போது, பிரதமா் மோடி எழுப்பியுள்ளாா். வெளியுறவு அமைச்சரும் கொழும்பு சென்ற போது, இலங்கை நிதித் துறை மற்றும் மீன்வளத் துறை அமைச்சா்களை சந்தித்துப் பேசியுள்ளாா் என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.