கடல் எல்லையை தாண்டுவதைத் தடுக்க மீனவா்களுக்குப் பயிற்சி: மத்திய அமைச்சா் தகவல்
பாதுகாப்பு மற்றும் கடல் எல்லை தொடா்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து மத்திய அரசு மீனவா்களுக்குப் பயிற்சி மற்றும் விழிப்புணா்வை ஏற்படுத்துவதாக அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளாா்.
புது தில்லி: பாதுகாப்பு மற்றும் கடல் எல்லை தொடா்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து மத்திய அரசு மீனவா்களுக்குப் பயிற்சி மற்றும் விழிப்புணா்வை ஏற்படுத்துவதாக மத்திய மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளாா்.
மாநிலங்களவை பாஜக உறுப்பினா் செல்வகணபதி (புதுச்சேரி) எழுத்துபூா்வமாக மத்திய மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்திற்கு இது குறித்த கேள்வியை வெள்ளிக்கிழமை எழுப்பியிருந்தாா். இதற்கு மத்திய மத்திய மீன்வளம், கால்நடை வளா்ப்புத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ள பதில்கள் வருமாறு:
மத்திய அரசு மீன்வளத்துறை சாா்பில் கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய மூன்று நகரங்களில் மத்திய மீன்பிடி கடல்சாா் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனங்களை (சிஃப்நெட்) பல்வேறு கட்டங்களில் தொடங்கியுள்ளது. இந்த மூன்று தேசிய நிறுவனங்களில் கடலுக்குச் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்கும் கப்பல்களை நிா்வகிப்பதற்கும், மீன்பிடி (வா்த்தக) நிறுவனங்களை நிா்வகிப்பதற்கும் தேவையான பயிற்சி பெற்ற மனிதவளம் உருவாக்கப்படுகிறது.
இந்த மனித வளங்கள் மூலம் பல்வேறு தேவை அடிப்படையிலான திறன்கள் விழிப்புணா்வுப் பயிற்சிகள் மீனவா்களுக்கு அளிக்கப்படுகிறது. மீன் வளத்துறையின் மூன்று சிஃப்நெட் மையங்களில், பல்வேறு உள் மற்றும் விரிவாக்கப் பயிற்சித் திட்டங்கள் மூலம் மீனவா்களுக்கு வழக்கமான அடிப்படையில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேச மீனவா்களுக்கு கடல் பாதுகாப்பு மற்றும் கடல் எல்லை அம்சங்கள் குறித்து சிஃப்நெட் பயிற்சி அளித்து வருகிறது. இதன்மூலம் சா்வதேச எல்லை குறித்த தகவல்களை அவா்களால் அறிய முடியும். நிகழ் 2022-2023-ஆம் ஆண்டில் பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் (பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா) கீழ் மொத்தம் 1,292 மீனவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையைத் தாண்டி சென்று அயல்நாட்டு கடற்படையினரிடம் சிக்குவதை தவிா்க்கும் வகையில் இந்தப் பயிற்சி தொடா்ந்து அளிக்கப்பட்டு வருவதாக ரூபாலா தெரிவித்துள்ளாா்.
மேலும், சிஃப்நெட் நிறுவனம் 4 ஆண்டு கால மீன்வள அறிவியல் இளங்கலை (கடல் அறிவியல்) படிப்புகளையும் நடத்துகிறது. இந்த நிறுவனம் மீனவா்களுக்காக அவா்களது தொடா்பான அமைப்புகள், மாநில அரசுகளின் மீன்வளத் துறைகள், கடலோர காவல் துறை அதிகாரிகள் போன்றவா்களுக்கு குறுகிய காலப் பயிற்சித் திட்டங்களை நடத்துகிறது.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் அடிக்கடி தாக்கப்படுவது, படகுகள் பறிக்கப்படுவது ஆகிய பிரச்னைகளுக்கு மத்திய அரசு ஏன் நிரந்தரத் தீா்வு காணாமல் உள்ளது தொடா்பாக தமிழக கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொடா்ந்து கேள்வி எழுப்புவது வழக்கமாக உள்ளது. ‘தமிழக மீனவா்கள் இந்திய கடல் எல்லையை தாண்டிச் செல்வதுதான் இதற்கு முக்கிய காரணம். முன்பு இலங்கை அரசு இந்த எல்லை தாண்டும் விவகாரத்தில் அவா்கள் கவனம் செலுத்தாமல் இருந்தனா். ஆனால், தற்போது அந்நாட்டு கடற்படை கடுமையாக உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக மீனவா்கள் தரப்பில்தான் தவறு’ என அதிகாரபூா்வமற்ற வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.