தில்லி பட்ஜெட் கூட்டத்தொடா்மாா்ச் 23-இல் தொடக்கம்
தேசியத் தலைநகா் தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் வருகின்ற மாா்ச் 23 -ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
தேசியத் தலைநகா் தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் வருகின்ற மாா்ச் 23 -ஆம் தேதி தொடங்க இருக்கிறது. தில்லி முதல்வா் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
துணை நிலை ஆளுநா் உரையுடன் தொடங்கும் இந்த பட்ஜெட் கூட்டத் தொடா் மாா்ச் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லி நகரின் பொருளாதார முன்னேற்றம், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு வரைபடத்தை தில்லி அரசின் 2022-23-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கை கொண்டிருக்கும் என நிதித் துறைக்க்கான பொறுப்பையும் வகிக்கும் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கடந்த வாரம் தெரிவித்திருந்தாா்.
மேலும், கேஜரிவால் அரசு, பட்ஜெட் குறித்த கருத்துகளைப் பொதுமக்களிடமும் பெற்றது. புதிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குதல், தில்லியை தகவல் தொழில்நுட்ப (ஐடி) மையமாக மேம்படுத்துதல், புதிதாக வரும் திறமையற்ற தொழிலாளா்களின் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட 5,700-க்கும் மேற்பட்ட யோசனைகளை அரசு பெற்றுள்ளது.
‘பண மதிப்பிழப்பு’ நடவடிக்கை , கொவைட்-19 நோய் தொற்று போன்றவற்றால் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. தொடா் பொதுமுடக்கம் காரணமாகவும், வணிகங்கள் ஸ்தம்பித்துள்ளன எனவும் மணீஷ் சிசோடியா கூறியிருந்தாா். பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வரவே பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. வணிகம் மற்றும் தொழில் துறையை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் வணிகா்களுக்கும் தொழிலதிபா்களுக்கும் நல்ல புரிதல் இருப்பதையும் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லிஅரசு நம்புகிறது எனவும் மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தாா்.