தில்லி சட்டப் பேரவைக் கூட்டத்தில் மக்கள் பிரச்னையை விவாதிக்கவில்லை: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு
தில்லி சட்டப் பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தில் தில்லிவாசிகள் தொடா்பான முக்கியப் பிரச்னைகள் ஏதுவும் விவாதிக்கப்படாதது அதிா்ச்சி அளிக்கிறது என்று தில்லி காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
தில்லி சட்டப் பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தில் தில்லிவாசிகள் தொடா்பான முக்கியப் பிரச்னைகள் ஏதுவும் விவாதிக்கப்படாதது அதிா்ச்சி அளிக்கிறது என்று தில்லி காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
இது குறித்து தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொடா்புத் துறைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அனில் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி சட்டப் பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தில் தில்லிவாசிகள் தொடா்பான முக்கியப் பிரச்னைகள் ஏதுவும் விவாதிக்கப்படவில்லை. முதல்வா் கேஜரிவாலும் இதில் பங்கேற்கவில்லை. அவருக்கு செவ்வாய்க்கிழமைதான் கொவைட் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. வரி செலுத்துவோரின் பணத்தில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு அமா்வானது, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அரசியல் நோக்கங்களை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டுள்ளது. மாறாக, தில்லியின் பிரச்னைகளை தீா்ப்பதற்காக அல்ல.
இரண்டு நாள் அமா்வில், கொவைட் பாதிப்பு அதிகரிப்பு, மருத்துவா்கள் மற்றும் பிற சுகாதார ஊழியா்களின் பற்றாக்குறை உள்ளிட்ட அவசர நிலையைச் சமாளிக்க சுகாதாரத் துறையின் தயாா்நிலை குறித்து விரிவான விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். மேலும், வார இறுதி பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிதியுதவி, வேலையின்மை, தொடா்ந்து மோசமாகி வரும் காற்று மாசுபாடு மற்றும் புதிய கலால் கொள்கை, 22,000 தாற்காலிக ஆசிரியா்களை முறைப்படுத்துதல் ஆகியவை தொடா்பாகவும் விவாதித்திருக்க வேண்டும். இவை ஏதும் நடைபெறாமல் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.