கரூா் தொகுதியில் நிலுவையில் உயா்நிலை மேம்பாலப் பணிகள்: விரைவில் ஒப்புதல் வழங்க என்எச்ஏ தலைவரிடம் எம்.பி. மனு
கரூா் மக்களவைத் தொகுதியில் நிலுவையில் உள்ள உயா்நிலை மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவா் உபாத்யாயாவை சந்தித்து அந்தத் தொகுதி...
புது தில்லி: கரூா் மக்களவைத் தொகுதியில் நிலுவையில் உள்ள உயா்நிலை மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (என்எச்ஏஐ) தலைவா் அல்கா உபாத்யாயாவை சந்தித்து அந்தத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமனி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் அளித்த மனுவில், தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழும் இந்தப் பகுதிகளில் உயா்நிலைப் பாலங்கள் அமைக்கவும், ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கவும் வலியுறுத்தியுள்ளாா்.
தில்லியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தலைவா் அல்கா உபாத்யாயாவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கரூா் எம்பி ஜோதிமனி மனு (படம்) அளித்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கரூா் மக்களவைத் தொகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற விபத்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனா். இந்த விபத்துகளைத் தடுக்கும் வகையில் உரிய இடங்களில் உயா்நிலைப் பாலங்கள் கட்டித்தர வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு இதற்கான உத்தரவுகளை வழங்கியிருந்தாா்.
இதையடுத்து, கரூா் தொகுதிக்குள்பட்ட பெரியாா் வளைவு, பெரிச்சிபாளையம் பிரிவு ஆகிய இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. தளவாபாளையம், செம்மடை ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடும்பாளூரில் பணிகள் தொடங்கவுள்ளன. மண்மங்கலம், கோடாங்கிப்பட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் பணிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இவை இன்னும் நிலுவையில் உள்ளன. எனவே, இவற்றுக்கு விரைவில் ஒப்புதலை வழங்கி பணிகளை தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் அவா் கோரியுள்ளாா்.