தமிழகம் உள்பட 13 மாநிலங்களில்இயற்கை உரங்கள் தர ஆய்வகங்கள்: மத்திய அமைச்சா் தகவல்
தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் இயற்கை உரங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை
தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் இயற்கை உரங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.
இது குறித்து அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் கூறியிருப்பதாவது: மண்வள மேலாண்மைத் திட்டத்தின்கீழ் இயற்கை உரங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் ஆய்வகங்களுக்கு ரூ.85 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது. மத்திய அரசால் 7 ஆய்வகங்களுக்கும், மாநில அரசுகளால் 25 ஆய்வகங்களுக்கும் இதுவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் இந்த ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன. இயற்கை உரங்களைத் தயாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை. ஆனால், இவற்றை விற்பனை செய்வதற்கு மாநில அரசின் அனுமதி பெற வேண்டும். மேலும் இயற்கை உரங்களின் விலையை உறுதிப்படுத்தவும், விற்பனையை அதிகப்படுத்தவும் தேவையான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
பரம்பரகத் கிரிஷி விகாஷ் திட்டத்தின் கீழ் இயற்கை முறையிலான வேளாண்மைக்கு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.31,000 வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது. இயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் தோமா்.
இயற்கை உரங்களின் தரத்தை உறுதிப்படுத்தத் தேவையான ஆய்வகங்களை மத்திய அரசு ஏற்படுத்துமா என்று ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா்.பாலு புதன்கிழமை எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் மேற்கண்ட பதிலை அளித்துள்ளாா்.