போர்நிறுத்தம் கோரவில்லை; அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும்! - டிரம்ப்புக்கு ஈரான் பதிலடி!
அமெரிக்காவுடன் போர்நிறுத்தம் கோரியதாக டிரம்ப் கூறியது ஆதாரமற்றவை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது...
ஈரான் அரசு போர்நிறுத்தம் கோரியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது பொய்யானது மற்றும் ஆதாரமற்றது என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு, பதிலடியாக இஸ்ரேல் மற்றும் நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இத்துடன், சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாக முடக்கியுள்ளது. இதனால், ஏராளமான நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் புதிய தலைவர் அமெரிக்காவிடம் போர்நிறுத்தம் கோரியதாகவும், ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறக்கப்பட்டால் அதுகுறித்து பரிசீலனை செய்வதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 1) அன்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது பொய்யானது மற்றும் ஆதாரமற்றது எனவும், அமெரிக்கா தண்டிக்கப்படும் வரையில் போர் தொடரும் எனவும் ஈரானின் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறியதாவது:
“வன்முறையாளர்கள் (அமெரிக்கா) முழுவதுமாகத் தண்டிக்கப்பட்டு, ஈரானுக்கு உரிய இழப்பீடு முழுவதும் வழங்கப்படும் வரையில் இந்தப் போர் தொடரும்” எனக் கூறியுள்ளார்.
இதேபோல், அதிபர் டிரம்ப் கூறியதை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளும் நிராகரித்துள்ளன. மேலும், ஹோர்முஸ் நீரிணை தங்களின் கட்டுப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், எதிரிகளுக்கு அந்தப் பாதையில் அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.