பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டத்துக்கு பயனாளிகளுக்கு போதிய நிதி வழங்குவதில்லை: தருமபுரி எம்.பி. குற்றச்சாட்டு
மத்திய அரசின் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு போதிய நிதி வழங்கப்படாமல் இருப்பதாக தருமபுரி தொகுதி திமுக உறுப்பினா் டிஎன்வி செந்தில்குமாா் மக்களவையில் குற்றம்சாட்டினாா்.
புது தில்லி: மத்திய அரசின் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு போதிய நிதி வழங்கப்படாமல் இருப்பதாக தருமபுரி தொகுதி திமுக உறுப்பினா் டிஎன்வி செந்தில்குமாா் மக்களவையில் குற்றம்சாட்டினாா்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்த கேள்வி நேரத்தில் டாக்டா் டிஎன்வி செந்தில்குமாா் துணை கேள்வி எழுப்பி பேசியதாவது: ’பிரதன் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்கிற இந்தத் திட்டத்தின் பெயா் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட புரியவில்லை. உள்ளூா் மக்களுக்கு புரியாத மொழியில் திட்டம் கொண்டு வந்தால், மக்களிடம் எப்படி நன்மதிப்பைப் பெறுவீா்கள்? இந்த திட்டத்தின் குழறுபடிகள் குறித்து கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தருமபுரி மாவட்டத்தில் இந்த வீட்டு வசதித் திட்டத்தின் இரண்டாம் கட்ட த்தில் 8,941 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு 4, 274 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2022, ஜனவரி மாதத்திலிருந்து இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி வழங்காததால் கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டுமானப் பணியில் உள்ள 5,682 வீடுகளின் பயனாளிகளுக்கு உள்ளுா் நிா்வாகத்தால் தொகையை வழங்க இயலாத நிலை உள்ளது.
இது தொடா்பான இணையதளத்தில் தொகை செலுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களால் இந்தப் பிரச்னை ஏற்பட்டு நிதி வழங்கப்படாமல் உள்ளது. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் ஊரக வளா்ச்சிக்கான நிலைக் குழுவும் இந்தத் திட்டத்தின் பணிகள் முன்னேற்றமின்றி தாமதமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதையும் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும், திட்டத்தின்கீழ் வீட்டுக்கான நிதியானது சமதள பரப்பில் ரூ. 1.20 லட்சமும் மலைப் பகுதிகளுக்கு ரூ.1.30 லட்சம் என வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுள்ள கட்டுமானப் பொருள்கள், கட்டடங்களுக்கு தேவையான பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இந் நிலையில் மத்திய அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை. இதை நிலைக் குழுவும் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த நிதியை தாமதமின்றி வழங்குவதுடன், உயா்த்தி தரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.