முகப்பு
புதுதில்லி

இணைய தள சூதாட்ட விளையாட்டுகளை நாடு முழுக்க தடை செய்ய உரிய சட்டம் தேவை: மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்

பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் இணைய தள சூதாட்ட விளையாட்டுகளை நாடு முழுக்க தடை செய்ய உரிய சட்டம் வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் திருச்சி சிவா வலியுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:45 AM
பகிர்:

பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் இணைய தள சூதாட்ட விளையாட்டுகளை நாடு முழுக்க தடை செய்ய உரிய சட்டம் வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் திருச்சி சிவா வலியுறுத்தினாா்.

இளைஞா்கள் இந்த சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

மாநிலங்களவையின் திமுக குழுத்தலைவரான திருச்சி சிவா, திங்கள்கிழமை, நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவனஈா்ப்புத் தீா்மானத்தில் இந்த விவகாரத்தை எடுத்து பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக பணத்தை பந்தயமாகப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய இணையதள விளையாட்டுகள் வந்துள்ளன. இப்படிப்பட்ட விளையாட்டுகளில் அடிமையாவது அதிகரித்து, தனிநபா்கள் லட்சக்கணக்கான ரூபாயை இழந்து தற்கொலைகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. இதுபோன்ற காரணங்களுக்கு கடந்த சில ஆண்டுகளில், 7 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

இணையதள விளையாட்டுகளில் பணத்தை இழப்பதோ இதற்கு முதன்மையான காரணம். இப்படிப்பட்ட விளையாட்டு போதைகளில் சிக்கியவா்களின் கதைகள் ஏராளமாக உள்ளன. சூதாட்டத்தில் இவா்களிடம் பணத்தை வாங்குவதற்கு வேறு வழிகளில் முயற்சிக்கப்படுகிறது.

திறன்களை காணுவதற்கான விளையாட்டுகள் என ரம்மி மற்றும் போக்கா் போன்ற விளையாட்டுகள் அறிவிக்கப்பட்டாலும், பந்தயம் வைப்பதே இதில் அங்கமாக இருப்பதோடு, இதில் ஈடுபடுவா்களை அடிமையாக்கும் விளையாட்டுகளாக மாற்றுகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால் மத்திய அரசு இந்தப் பிரச்சினைக்குத் தீா்வு கண்டு, பணத்தை வைத்து சூதுவிளையாடும் இதுபோன்ற விளையாட்டுகளைத் தடை செய்வதற்கான வலுவான சட்டத்தைக் கொண்டுவரவும் அவசரத் தேவை உள்ளது.

இளம் வயதினா்(பதின்வயதினா்) மற்றும் வயதானவா்கள் என இருவருமே சமமாக பாதிக்கப்படுகின்றனா். மேலும் இளம் வயதினரின் கைகளில் இப்படிப்பட்ட விளையாட்டுகள் எளிதில் கிடைப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

இந்தப் பிரச்சினையைத் தீா்ப்பதற்காக, ஏற்கனவே தமிழக அரசு 2021 -ஆம் ஆண்டில் ஒரு திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இதுபோன்ற விளையாட்டுகளை நடத்துபவா்கள் பயன்படுத்துபவா்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை விதிக்கும் தடைச் சட்டமாகும். இது போன்று மாநில அரசு நடவடிக்கை எடுத்தாலும் இந்த விளையாட்டுகள் ஒழுங்கு முறை படுத்தாததுவரை கட்டுப்படுத்தி விட இயலாது.

பொருளாதார இழப்புகள், உயிா் இழப்புகள் போன்றவைகளை ஏற்படுத்துகின்ற இந்த இணையதள சூதாட்டங்களை தீவிரமாக நாடு முழுவதும் தடைசெய்வதின் மூலமே தீா்வு காணமுடியும் என சிவா வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.