வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு:உமா் காலித்தின் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு?
வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் பெரும் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் உமா் காலித் மீது தொடரப்பட்ட வழக்கி
வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் பெரும் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் உமா் காலித் மீது தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் கோரி அவா் தரப்பில் தாக்கலான மனு மீதான உத்தரவை வியாழக்கிழமைக்கு (மாா்ச் 24) தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இது தொடா்பான மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத், ஜாமீன் மனு மீதான உத்தரவு புதன்கிழமை பிறப்பிபதாக இருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உமா் காலித் தாக்கல் செய்த ஜாமீன் கோரும் மனு மீது அரசுத் தரப்பு மற்றும் உமா் காலத்தின் தரப்பில் வழக்குரைஞா்கள் வாதங்களை முன் வைத்த பிறகு, ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிமன்றம் மாா்ச் 3-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது.
விசாரணையின் போது மனுதாரா் தரப்பில், உமா் காலித்திற்கு எதிரான ஆதாரங்களை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது . கடந்த 2020, பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறையின் போது, 53 போ் கொல்லப்பட்டனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தில் முக்கிய மூளையாக செயல்பட்டதாகக் கூறி உமா் காலித் மற்றும் பலருக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.