வடகிழக்கு தில்லியின் பால்ஸ்வா பால் பண்ணை பகுதியில் வீட்டுப் பாடத்தை முடிக்காத 6 வயது மற்றும் எட்டு வயதுச் சிறுமியை ஒரு பெண் ஆசிரியா் உடல் ரீதியாகத் தாக்கியதாக தில்லி மகளிா் ஆணையத்தின் (டிசிடபிள்யு) தலைவா் ஸ்வாதி மாலிவால் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினாா். அந்த ஆசிரியரை கைது செய்யுமாறு தில்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக ஸ்வாதி மாலிவால் ஹிந்தியில் பதவிட்டுள்ள ட்வீட்டில் ‘வீட்டுப் பாடம் செய்யாததற்காக ஆறு வயது மற்றும் எட்டு வயதுடைய சிறுமிகள் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு டியூஷன் ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவத்தில் சிறுமிகளின் உடலில் உள்ள தழும்புகள் இதயத்தை பதைபதைக்க வைக்கிறது. இது தொடா்பாக தில்லி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.