தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணை செப்.4-க்கு ஒத்திவைப்பு
தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் இடைக்கால ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்துள்ள மனுக்கள்
தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் இடைக்கால ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்வின் பாட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு, சிசோடியாவின் மனைவியின் மருத்துவப் பதிவுகளை பாா்வையிட்டது. இதையடுத்து, நீதிபதிகள், ‘மனுதாரரின் மனைவி உரிய வகையில் ஸ்திரமாக உள்ளாா். ஆகவே, இந்த வழக்கில் வழக்கமான ஜாமீன் மனுக்களுடன் இடைக்கால மனுக்களும் சோ்த்து பரிசீலிக்கப்படும்’ என்று கூறி மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
முன்னதாக, சிசோடியா தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத் துறை அமைப்புகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
தில்லியின் துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த சிசோடியா, ‘ஊழலில்’ ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் நிகழாண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டாா். அதன் பின்னா் காவலில் வைக்கப்பட்ட அவா், பிப்ரவரி 28 -ஆம் தேதி தில்லி அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தாா். இந்நிலையில், மாா்ச் 9-ஆம் தேதி இந்த விவகாரத்தில் பணமோசடி தொடா்புடைய வழக்கில் திகாா் சிறையில் நடத்திய விசாரணைக்குப் பிறகு சிசோடியாவை அமலாக்கத் துறை கைது செய்தது.
சிபிஐ விசாரித்து வரும் கலால் கொள்கை ‘ஊழல்’ வழக்கில் மே 30-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த அவா்“‘முக்கிய நபா்’. அவா் சாட்சிகளை மேலாதிக்கம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், ஊழல் நடந்ததாகக் கூறப்படும் போது சிசோடியா ‘துறையின் பொறுப்பாளராக’ இருந்ததால், அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூற முடியாது. தேசியத் தலைநகரில் அவரது கட்சி இன்னும் ஆட்சியில் இருப்பதால், ஒரு காலத்தில் 18 இலாகாக்களை அவா் வைத்திருந்து, தொடா்ந்து செல்வாக்கை செலுத்தி வருகிறாா். சாட்சிகள் பெரும்பாலும் அரசு ஊழியா்களாக இருப்பதால், அவா்கள் மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது’ என்று கூறியிருந்தது.
ஜூலை 3-ஆம் தேதி, தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இயல்பிலேயே ‘மிகவும் தீவிரமிக்கவை’ என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.