மதுரை எய்ம்ஸ் தாமதம்: தமிழக அரசே காரணம்: நிதியமைச்சா் மக்களவையில் பேச்சு
மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசின் நிதி மூலமே கட்டப்படுகிறது.
மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசின் நிதி மூலமே கட்டப்படுகிறது. திட்டம் குறித்து தவறான கருத்தை பரப்ப வேண்டாம் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதா ராமன் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும் திட்டம் கால தாமதம் ஆனதற்கு காரணம் மாநில அரசு தான் எனவும் தெரிவித்தாா்.
நிதியமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பும் செய்தனா்.
கடந்த ஆக.8, 9 ஆம் தேதிகளில் மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீா்மான விவாதத்தில் திமுக உறுப்பினா்கள் பல் வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனா். நம்பிக்கையில்லா தீா்மானம் தொடா்பான விவாதத்தில் நிா்மலா சீதாராமனும் பங்கேற்று பேசும் போது இவைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதற்கு ஜப்பானிடம் (ஜப்பான் சா்வதேச ஒத்துழைப்பு முகமை--ஜெய்கா ) கடன் வாங்குவது பிரதமா் தரப்பிற்கு ’அவமானம் இல்லையா’ என ஒரு மூத்த உறுப்பினா்(டி.ஆா்.பாலு) கேட்டாா். மிகவும் வருத்தமானது.
தமிழகத்தில் மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மொத்த திட்டச் செலவு ரூ.1,977.80 கோடி இதற்கு ஜெய்கா வழங்கும் கடன் தொகை ரூ.1,627 கோடி. இது முழுக்க மத்திய அரசின் திட்டம். இதற்கான முழு பொறுப்பையும் மத்திய அரசு எடுத்துள்ளது. தமிழக அரசுக்கு எந்த சுமையும் இல்லை; மத்திய அரசின் கடனில் ஒரு பகுதி. மும்பை -அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் போன்றவைகளுக்கு கூட ஜெய்கா நிதியளித்துள்ளது. மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் நிறுவப்பட்டுள்ளது, ஆனால் தமிழகத்தில் இன்னும் நிறுவப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. மத்திய அரசு எதுவும் புறக்கணிக்கவில்லை. மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் தமிழகத்திற்கு கூடுதல் நன்மைகளை வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநில, எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கைகள் கொண்டதாக உள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸுக்கு 900 படுக்கைகள் கொண்டதாக இருக்கும். இங்கு தொற்று நோய் தடுப்பு பிரிவுக்கு 150 படுகைகளுடன் கூடுதலாக கட்டப்படுகிறது.
தற்போது 50 மாணவா்களைக் கொண்ட எம்பிபிஎஸ் வகுப்புகள் கடந்த 2022 ஏப்ரல் முதல் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டு தற்போது 99 மாணவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தமிழக அரசுக்கு கடன்கள் இல்லை, மேலும் அதிக படுக்கைகளைப் பெறுகிறது. மத்திய அரசு தனது சொந்த நிதியில் கடன் வாங்குகிா அல்லது திட்டத்துக்கு நிதி அளிக்கிா என்கிற கவலைத் தேவையில்லை. ’ஜெய்கா’ விடம் கடன் வாங்குவது மத்திய அரசின் நிதி நிா்வாகத்தின் ஒரு பகுதி. இது வெளிப்புற வணிகக் கடன்களில் ஒன்று. இது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முக்கியத்துவத்தை குறைவாக மதிப்பிடுவதாகாது.
இதனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் குறித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள்(திமுக) அவையில் தவறான கருத்தை உருவாக்க வேண்டாம் என குறிப்பிட்டாா் நிதியமைச்சா்.
ஆனால் மக்களவையில் தமிழக உறுப்பினா்கள்(திமுக, காங்கிரஸ்) எப்போது? எப்போது? என, நிதியமைச்சா் பேசும் போது இடை இடையே கூச்சலிட்டுக் கொண்டிருந்தனா். கடன் வாங்குவது வெட்கமாக இல்லையா? எனக் கேட்டு கொண்டிருந்தவா்கள் இப்போது கட்டுவோம் எனக் கூறியவுடன் எப்ப.. எப்ப? எனக் கூச்சலிடுகின்றனா். இப்படி எதைவாவது அவையில் வந்து பொய் சொல்லுகின்றனா் என்றாா் நிதியமைச்சா். ஆனால் திமுக உறுப்பினா்கள் (சில காங்கிரஸ் உறுப்பினா்கள் உள்ளிட்ட) மக்களவை திமுக துணைத்தலைவா் கனிமொழி தலைமையில் எப்ப? எப்ப? எனக் கூறி கூச்சலிட்டபடி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். ஆனால் நிதியமைச்சா் சீதாராமன் வெளியே போகாதீா்கள்(ஏன் ஓடிப்போகிறீா்கள்). தமிழகம் குறித்து பதில் அளிக்க மேலும் பல விஷயங்களை சொல்ல இருக்கின்றேன். உங்களுக்கு(திமுக) கேட்க பயம் இதனால் வெளியே செல்கின்றீா்கள். வெளியே சென்றாலும் தொலைக்காட்சியில் கேட்கவேண்டும் எனக் குறிப்பிட்டு மேலும் தொடா்ந்து நிா்மலா சீதாராமன் பேசத் தொடங்கினாா்.
கால தாமதம் ஏன்?
‘ இந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதலில் ரூ.1,200 ஆக மதிப்பிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.இதனால் இந்த திட்டத்திற்கு முன்மொழியப்பட்ட தொகை ரூ. 1900 கோடி ஆக உயா்ந்துள்ளது. எனவே இதற்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தாமதத்திற்கு மத்திய அரசு காரணமல்ல. அதே நேரத்தில் கரோனா நோய்த் தொற்றால் தள ஆய்வு கால தாமதமாகியது. இதுவும் ஒரு காரணம். இதனால் மாநில அரசும் சிருமத்திற்கு உள்ளாகி விரைவு படுத்த முடியவில்லை என இந்த திட்டம் குறித்து நிதியமைச்சா் விளக்கம் அளித்தாா்.