ஆப்கன் அகதிகளுக்கான பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்: ஊதியம் வழங்கக் கோரிக்கை
தில்லியில் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக நடத்தப்படும் சையத் ஜமாலுதீன் ஆப்கான் பள்ளி ஆசிரியா்கள் தங்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை அந்த நாட்டு தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக நடத்தப்படும் சையத் ஜமாலுதீன் ஆப்கான் பள்ளி ஆசிரியா்கள் தங்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை அந்த நாட்டு தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், இதேபோன்று பள்ளியின் முதல்வருக்கும் கூட ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் குற்றம்சாட்டினா்.
இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சையத் ஜமாலுதீன் ஆப்கான் பள்ளி ஆசிரியா்கள் கூறியதாவது: ஊதியம் தராததால் நாங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆசிரியா்களான நாங்கள் அதிகமாகவே வேலை செய்கிறோம். ஆனால், அதற்கான ஊதியம் எங்களுக்கு கிடைப்பதில்லை. தூதரக அதிகாரி ஒருவா் எங்களிடம் பேசினாா். பள்ளி முதல்வருடனும் பேசியுள்ளாா் என்று அவா்கள் கூறினா்.
எங்களின் ஊதியத்திற்கான எந்த உத்தரவாதமும் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியா்களில் ஒருவா் கூறினாா். கடந்த வெள்ளிக்கிழமை, சையத் ஜமாலுதீன் ஆப்கானிஸ்தான் பள்ளியைச் சோ்ந்த 21 ஆசிரியா்களில் 20 போ் பள்ளிக்கு நிதி வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் முன் கூடி, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் ஒரு கடிதத்தை சமா்ப்பித்தனா்.