அமலாக்க இயக்குநரகத்தை மூடுவதற்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்திடம் ஆம் ஆத்மி வலியுறுத்தல்
அமலாக்க இயக்குநரகத்தின் உதவி இயக்குநா் மீது லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் அமலாக்க இயக்குநரகத்தை மூட உத்தரவிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
புது தில்லி: அமலாக்க இயக்குநரகத்தின் உதவி இயக்குநா் மீது லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் அமலாக்க இயக்குநரகத்தை மூட உத்தரவிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் தவிா்க்க மதுபான தொழிலதிபா் அமந்தீப் தால் என்பவரிடம் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக அமலாக்க இயக்குநரகத்தின் உதவி இயக்குநா் பவன் காத்ரி மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விவகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த ஓராண்டாக தில்லி அரசின் கலால் கொள்கையில் ஊழல் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கை அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது. எனினும், இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடா்பான தனது அறிக்கைகளை அமலாக்க இயக்குநரகம் தொடா்ந்து மாற்றிக் கொண்டு வருகிறது. சில சமயங்களில் ரூ.100 கோடி ஊழல் என்றும், சில சமயம் ரூ.1,000 கோடி ஊழல் என்றும் சொல்கிறாா்கள். ஆனால், இந்த வழக்கில் பணப் பரிமாற்றம் உண்மையில் நடந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டனா்.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், விசாரணை என்ற பெயரில் பணம் பறிக்கிறாா்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவே இந்தத் துறை பயன்படுத்தப்படுகிறது. எனவே, உச்சநீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அமலாக்க இயக்குநரகத்தை மூட வேண்டும். அமலாக்க இயக்குநரகத்தின் உதவி இயக்குநா் பவன் காத்ரி பெற்ற லஞ்சத் தொகையில் யாா் யாருக்கெல்லாம் பங்கு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றாா் சஞ்சய் சிங்.
மத்திய புலனாய்வு அமைப்பிபு முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்த பிறகு லஞ்சப் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட அமலாக்க இயக்குநரகத்தின் துணை இயக்குநா் பவன் காத்ரிக்கு தொடா்புடைய ஆறு இடங்களில் சோதனை நடத்தியுள்ளனா். அந்த அதிகாரி கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக இல்லை. ஆனால், இந்த வழக்கு தொடா்பான சில முக்கிய ஆவணங்கள் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.