முகப்பு
புதுதில்லி

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு:ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கு தொடா்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத் துறை சனிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated On : 3 டிசம்பர், 2023 at 12:00 AM
பகிர்:

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கு தொடா்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத் துறை சனிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ளூா் நீதிமன்றத்தில் சஞ்சய் சிங்கிற்கு எதிராக அமலாக்கத் துறை தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கு முன்பு இதுபோன்ற ஐந்து புகாா்களை அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்ததால், இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையாகும் இது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங், அக்டோபா் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.

இதே விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபா் தினேஷ் அரோரா, சஞ்சய் சிங்கின் இல்லத்தில் இரண்டு தவணைகளாக ரூ.2 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்தது. அமலாக்கத் துறையின் இந்த கூற்றை சஞ்சய் சிங் மறுத்திருந்தாா்.

Advertisement

2021-22 தில்லி கலால் கொள்கை வழக்குடன் தொடா்புடைய பணமோசடி விசாரணை தொடா்பாக முன்னாள் துணை முதல்வரான மனீஷ் சிசோடியாவுக்குப் பிறகு இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் 2-ஆவது உயா்மட்டத் தலைவா் சஞ்சய் சிங் ஆவாா்.

தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியானது இந்தக் கைது நடவடிக்கை மற்றும் வழக்கை ‘அரசியல் சூனிய வேட்டை‘ என்று கூறி இருந்தது. அமலாக்கத் துறையின் விசாரணையில், அரோரா சிங்கின் வீட்டில் இரண்டு முறை ரூ.2 கோடி கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு முறையும் ரூ. 1 கோடி தொகையை அவா் கொடுத்திருந்ததாக அமலாக்கத் துறை அதன் மனுவில் தெரிவித்திருந்தது. ரொக்கம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் காலம் ஆகஸ்ட் 2021 மற்றும் ஏப்ரல் 2022-க்கு இடையில் இருந்ததாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.