புது தில்லி: தில்லி பாஜகவின் சிறுபான்மை அணி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நன்றி மோடி ஜி’ பிரசாரத்தின் கீழ் முஸ்லிம் பெண்களிடம் கையெழுத்து இயக்கம் புதங்கிழமை நடத்தப்பட்டது.
இது தொடா்பாக தில்லி பாஜக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாஜக நடத்தும் ‘நன்றி மோடி ஜி’ என்ற பிரசார இயக்கம் முஸ்லிம் சமூகத்தினரிடயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தின் நலன்கள் மற்றும் அவா்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பிரசாரம் கட்சியின் சிறுபான்மை அணியால் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தில்லி தா்யாகஞ்ச் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நன்றி மோடி ஜி’ பிரசார இயக்கத்தில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனா். மேலும், இந்நிகழ்ச்சியில் பாஜக ஓ.பி.சி. அணியின் தேசிய செயற்குழு உறுப்பினா் அதிஃப் ரஷீத், தில்லி பிரதேச சிறுபான்மை அணியின் பொறுப்பாளா் காரி முகமது ஹாரூண் ஆகியோரும் பங்கேற்றனா்.
அதன் பின்னா், தில்லி பாஜக சிறுபான்மை அணியின் தலைவா் அனீஷ் அப்பாசி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவாவின் வழிகாட்டுதலின்படி, தில்லியின் பல்வேறு பகுதிகளில் ‘நன்றி மோடி ஜி’ பிரசாரம் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு, முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மசோதா, மெஹ்ரம் இல்லாத ஹஜ் யாத்திரை வசதி என டஜன் கணக்கான திட்டங்களை வழங்கி முஸ்லிம் சமூக பெண்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி பலன் அளித்துள்ளாா்.
மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பிரசாரம் தொடா்ந்து நடைபெறும். மத்திய அரசிடம் இருந்து எந்த பாகுபாடுமின்றி முஸ்லிம் சமூகம் சமமான வசதிகளைப் பெற்று வருகிறது. பாஜக அரசு உண்மையில் அனைவருக்கும் ஆதரவளித்து வருகிறது என்பதை நிரூபித்துவிட்டது என்றாா் அனீஷ் அப்பாசி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.