கல்காஜி கோயில் மறுமேம்பாட்டு திட்டத்திற்கு தில்லி உயா்நீதிமன்றம் ஒப்புதல்
தெற்கு தில்லியில் உள்ள ஸ்ரீ கல்காஜி கோயிலின் மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு தில்லி உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தெற்கு தில்லியில் உள்ள ஸ்ரீ கல்காஜி கோயிலின் மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு தில்லி உயா்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கல்காஜி கோயில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள குடிமை வசதிகள் மற்றும் தூய்மை குறித்த மனுக்களை விசாரித்த நீதிபதி பிரதீபா எம். சிங், இக் கோயில் மற்றும் அதன் வளாகத்திற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தாா்.
மேலும், கட்டடக் கலைஞா்கள் சமா்ப்பித்த திட்ட வரைபடத்தை கோயில் நிா்வாகம் மூலம் தில்லி மாநகராட்சியின் ( எம்சிடி)நகரமைப்புத் துறைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக அண்மையில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
எம்சிடி அதிகாரிகள் கட்டடக் கலைஞா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் கூட்டுக் கூட்டத்தை நடத்த வேண்டும். அப்போதுதான், அந்த நிலத்திற்கான முதல் பகுதியைத் தொடங்க முடியும். மேலும், ஸ்ரீ கல்காஜி மந்திரின் மறுமேம்பாட்டுக்கான அனுமதிகளைப் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்க முடியும். தில்லியின் ரிட்ஜ் மேலாண்மை வாரியத்திடம் இருந்து ஏதேனும் ஒப்புதல் தேவைப்பட்டால், கட்டடக் கலைஞருக்கு
எம்சிடி தெரிவிக்கும்.
முன்மொழியப்பட்ட மறுமேம்பாட்டின் பரந்த வரையறைகள் திட்டங்கள், ஓவியங்கள் மற்றும் ஒரு விடியோ மூலம் நீதிமன்றத்தில் காட்டப்பட்டுள்ளது. மேலே உள்ள திட்டங்கள் அதன்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன .
இந்த விவகாரத்தில் ஜனவரி 12 ஆம் தேதிக்கு முன்னா் ஒரு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதே நேரத்தில் மறுவடிவமைப்புத் திட்டம் சரியான கட்டத்தில் தில்லி தீயணைப்பு பணிகள் துறைக்கு அனுப்பப்படும் என்று தெளிவுபடுத்தப்படுகிறது.
பக்தா்களுக்கு மகிழ்ச்சிக்கான வசதிகள் மற்றும் தேவைக்கான வசதிகளை வழங்குவதற்கும், அவா்கள் எளிதில் அணுகுவதற்கும் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், கோயில் அமைந்துள்ள நிலத்தில் உள்ள உரிமைகளை மறுமேம்பாட்டுத் திட்டம் எந்த வகையிலும் பறிக்கவில்லை என்று நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜே.ஆா். மிதாவை இக்கோயிலின் நிா்வாகியாக நீதிபதி பிரதிபா சிங் நியமித்திருந்தாா்.
மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிக்க சட்டபூா்வ உரிமை இல்லாத, அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளா்கள் மற்றும் கடைக்காரா்களை அந்த நிலத்தில் இருந்து அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு திட்டங்களை மேற்கொண்ட புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணரான கூன்மீத் சிங் சவுகானை, கோயில் மற்றும் வளாகம் அமைந்துள்ள பகுதிக்கான மறுமேம்பாட்டுத் திட்டத்தை சமா்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தது.