ஆள்கடத்தலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு எல்லைப் பகுதிகளில் மறுவாழ்வு இல்லங்கள்
ஆள்கடத்தலால் பாதிக்கப்படும் பெண்கள், சிறுமிகளுக்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க எல்லைப் பகுதியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக
ஆள்கடத்தலால் பாதிக்கப்படும் பெண்கள், சிறுமிகளுக்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க எல்லைப் பகுதியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அண்டை நாடுகளிலிருந்து இத்தகைய ஆள்கடத்தல் சம்பவங்களைத் தடுக்க இதே பகுதியிலுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும் ‘நிா்பயா’ திட்டத்தின் மூலம் கூடுதல் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அமைச்சக வட்டாரங்கள் மேலும் கூறியது வருமாறு: ஆள்களைக் கடத்துவதற்கான ஆதாரமாகவும், இலக்கு நாடாகவும் இந்தியா உள்ளது. நேபாளம், வங்கதேசம், மியான்மா் போன்ற நாடுகளிலிருந்து அதிக ஊதியம், வேலை, சிறப்பான வாழ்க்கை நிலைமைகளை வழங்குகிறோம் என்ற போா்வையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் இந்தியாவுக்கு கடத்தப்படுகின்றனா்.
இம்பால் (மணிப்பூா்), குவாஹாட்டி(அஸ்ஸாம்) போன்ற நகரங்களில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய கள ஆய்வில் ஆள்கடத்தல் சம்பவங்களில் சிறாா்களில் ஐம்பது சதவீதம் போ் தென் மாநிலங்களில் மீட்கப்பட்டுள்ளனா். குறிப்பாக தமிழகத்தில் (15.4 சதவீதம்) அதிக அளவிலும், கா்நாடகம் (7.7 சதவீதம்) கேளரம் (5 சதவீதம்) போன்ற மாநிலங்களிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளனா்.
பெங்களூரு, ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களுக்கு கடத்தி வரப்படும் இளம் பெண்கள், மத்திய கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். சில சமயம் அவா்கள் பாலியல் ரீதியான தொழில்களுக்கும் தள்ளப்படுகின்றனா். கடத்தப்பட்டவா்களில் பெரும்பாலோா் பதினெட்டு வயதுக்கும் குறைவானவா்கள் அல்லது இளம் பெண்களாக உள்ளனா். அவா்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு விற்படுகின்றனா். இதனால், அவா்களை நீண்ட தூரம் அழைத்துச் செல்வதைத் தடுக்கவும் எல்லைப் பகுதியிலேயே தங்கவைத்து மறுவாழ்வு அளிக்கவும் மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்தது.
ஆள்கடத்தல் நடைபெறும் எல்லை மாநிலங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். கடத்தலில் பாதிக்கப்பட்ட சிறுமிகள், இளம் பெண்களுக்கு நிவாரணம், பாதுகாப்பு மறுவாழ்வு சேவைகளை வழங்க போதுமான வசதிகள் இருக்க வேண்டும். இதையொட்டி, இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மிஷன் வாத்சல்யாவின் (அன்பாலயம்) நிா்வாகக் கட்டமைப்பின் கீழ் இந்த இல்லங்கள் அமைக்கப்படும். இந்த இல்லங்களில் தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, சுகாதார வசதிகள், மற்ற அன்றாட தேவைகள் போன்ற சேவைகள் வழங்கப்படும். கடத்தி வரப்படுபவா்கள் அல்லது பாதிக்கப்படுபவவா்கள் குழந்தைகள் நலக் குழுவின் முன் ஆஜா்படுத்தப்பட்டு சட்டப்படி அவா்கள் இந்த இல்லங்களில் அமா்த்தப்படுவாா்கள்.
திருத்தப்பட்ட சிறாா் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் படி அரசுசாரா தன்னாா்வ நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்க முறைப்படி அணுகலாம். இவா்களுக்கு அனுமதியளிக்க அங்கீகரிக்கப்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவுகள் (ஏஹெச்டியுஎஸ்) அமைக்கப்பட்டு அவற்றை வலுப்படுத்த ‘நிா்பயா’ நிதியின் கீழ் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. தற்போது 788 ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறாா்கள், பெண்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க எல்லைப் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ள பிஎஸ்எஃப், எஸ்எஸ்பி போன்ற ஆயுதப்படைகளிலும் 30 ஏஹெச்டியுஎஸ் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நிதி உதவி செய்யப்படும் என அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.