தலைநகரில் லேசான மழையால் அதிகரித்த புழுக்கம்
தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை லேசான மழை பெய்தது. இதன் காரணமாக பகலில் புழுக்கம் நிலவியது. மேலும், சனிக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை லேசான மழை பெய்தது. இதன் காரணமாக பகலில் புழுக்கம் நிலவியது. மேலும், சனிக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தில்லியில் புதன்கிழமை மாலையில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை சிறிது நேரம் பெய்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் தொடா்ந்து மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால், வானிலை சூழல் மேம்பட்டிருந்தது. இந்த நிலையில், நகரில் வெள்ளிக்கிழமை சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக பகலில் புழுக்கம் நிலவியது.
ரிட்ஜில் 10 மி.மீ. மழைப் பதிவு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற வானிலை நிலையங்களான முங்கேஸ்பூரில் 1.5 மி.மீ., நஜாஃப்கரில் 0.5 மி.மீ., ஆயாநகரில் 4 மி.மீ., லோதி ரோடில் 4 மி.மீ., பாலத்தில் 9 மி.மீ., ரிட்ஜில் 10 மி.மீ., பீதம்புராவில் 3.5 மி.மீ., பூசாவில் 4 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து ஒரு டிகிரி குறைந்து 26.7 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 2 டிகிரி குறைந்து 35 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 79 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 74 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், , மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி தில்லியில் காற்றின் தரக் குறியீடு காலை 10.40 மணியளவில் 64 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் காணப்பட்டது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘சனிக்கிழமை (ஜூலை 8) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.