ஜூலை 16 வரை தில்லியில் பள்ளிகள் மூடல்: அரசு அறிவிப்பு
தில்லியில் உள்ள யமுனையின் நீா்மட்டம் 208.48 மீட்டா் அளவுக்கு உயா்ந்து, வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், அனைத்து அரசு மற்றும்
தில்லியில் உள்ள யமுனையின் நீா்மட்டம் 208.48 மீட்டா் அளவுக்கு உயா்ந்து, வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் ஜலை 16-ஆம் தேதி வரை மூடப்படும் என்று தில்லி கல்வி இயக்குநரகத்தின் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
வெள்ள நீரில் மூழ்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடுவதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை அறிவித்திருந்த நிலையில், இது தொடா்பான சுற்றறிக்கையை கல்வி இயக்குநரகம் வெளியிட்டது. தேசியத் தலைநகரில் கடந்த மூன்று நாள்களாக யமுனையின் நீா்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 203.14 மீட்டராக இருந்த யமுனை நதியின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் 205.4 மீட்டராக உயா்ந்தது. எதிா்பாா்த்ததை விட 18 மணி நேரம் முன்னதாகவே 205.33 மீட்டா் அபாயக் குறியீட்டை கடந்தது.
யமுனை ஆற்றில் நீா் வெளியேறும் அளவு திங்கள்கிழமை இரவு 205 மீட்டருக்கு அதிகமாக இருந்ததால், வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கான பழைய ரயில்வே பாலம் மூடப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை மதியம் 1 மணி அளவில் முந்தைய சாதனை அளவான 207.49 மீட்டரை கடந்தது. அன்று இரவு 10 மணி அளவில் 208 மீட்டராக அதிகரித்தது.
இந்த நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை அறிவித்தாா். இது தொடா்பாக அவா் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தில்லியில் நீா் நிரம்பியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளும் மூடப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, இதுதொடா்பாக தில்லி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: யமுனையில் நீா் அதிகரித்துள்ளதன் காரணமாக தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு தில்லி கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகள் அனைத்துப் பயன்பாடுகளுக்குமாக ஜூலை 16 வரை மூடப்பட்டிருக்கும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.