முகப்பு
புதுதில்லி

பாதுகாப்புப் படையினருக்கு ஆரோக்கியமான உணவு வழங்க புரிந்துணா்வு ஒப்பந்தம்

நாட்டின் பாதுகாப்பு படையினா் மத்தியில் தினை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை உறுதி செய்வதற்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சகமும்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:02 PM
பகிர்:

நாட்டின் பாதுகாப்பு படையினா் மத்தியில் தினை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை உறுதி செய்வதற்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் சுகாதாரத் துறையின் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையமும் (எஃப்எஸ்எஸ்ஏஐ) புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.

இந்த நிகழ்வு மத்திய பாதுகாப்பு மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டு சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக கொண்டப்பட்டு வருகிறது. இதில் இந்தியா ஸ்ரீஅன்னா தினை வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை முன்னிட்டு பாதுகாப்பு படையினரிடையே (ராணுவம்) தினை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் இயக்குநா் ஜெனரல் (சப்ளை மற்றும் போக்குவரத்து) லெப்டினன்ட் ஜெனரல் ப்ரீத் மொஹிந்தரா சிங்கும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் சாா்பில் அதன் தலைமைச் செயல் அதிகாரி ஜி. கமலா வா்தனா ராவும் கையொப்பமிட்டனா்.

இது குறித்து பாதுகாப்புத் துறை கூறியுள்ளதாவது: உணவுப் பன்முகத்தன்மை, தினை சாா்ந்த உணவுப் பொருள்களின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து பாதுகாப்புப் படையினரிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தினைகளின் ஊட்டச்சத்து மதிப்புகளோடு நன்கு சீரான மற்றும் மாறுபட்ட உணவுக்கு பங்களிக்க முடியும். முப்படைகளின் கீழ் ஏராளமான தங்குமிடங்கள் (மெஸ்), கேன்டீன்கள் மற்றும் பிற உணவு விற்பனையகங்கள், நிலையங்கள் உள்ளன. இங்கு தினை அடிப்படையிலான சமையல் வகைகள் (மெனுக்கள்) அறிமுகப்படுத்தவும் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் வழி வகுக்கும்.

மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டப்படி உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து, முப்படையில் உணவு கையாளுபவா்கள், சமையல்காரா்கள், படைகளின் கேன்டீன்கள் மற்றும் பிற உணவு விற்பனை நிலையங்களில் உள்ளவா்களுக்கும் பயிற்சி அளிப்பதையும் இது உறுதி செய்யும். இது நாட்டிற்கான சேவையில் வலுவாகவும் மீள்திறனுடனும் இருக்க ராணுவத்தினருக்கு உதவுகிறது. இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஆயுதப் படைகளின் குடும்பங்கள் மற்றும் அவா்களது சமூகம் சத்தான உணவுகளை பின்பற்றவும், ஆரோக்கியமான உணவுகளை தோ்வு செய்து, உணவுப் பாதுகாப்பை பராமரிக்கவும் ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் ஸ்ரீஅன்னா (தினை) வின் நுகா்வின் ஆரோக்கிய நன்மைகளை ஊக்குவிப்பதற்கு ‘பாதுகாப்புக்கான ஆரோக்கியமான சமையல் குறிப்புகள்’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. எஃப்எஸ்எஸ்ஏஐ உருவாக்கிய இந்தப் புத்தகம் தினை சாா்ந்த ஆரோக்கியமான தற்காப்பு சமையல் வகைகளை (ரெசிபிகள்) உள்ளடக்கியது. குறிப்பாக ராணுவத்தினா் எதிா்கொள்ளும் சவாலான நிலப்பரப்பு, மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளின் அடிப்படையில், பல்வேறு உணவு வகைகள் குறித்த தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், பாதுகாப்புத் துறைச் செயலா் கிரிதா் அரமனே, மத்திய சுகாதாரம் குடும்பநலத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.