முகப்பு
புதுதில்லி

ஐடிஓ தடுப்பணையில் அடைப்பு ஏற்பட்ட 5 கதவுகளில் 2 திறப்பு: போக்குவரத்தும் சீரானது

தில்லி ஐ.டி.ஓ. தடுப்பணையில் மொத்தம் உள்ள 32 கதவுகளில் வண்டல் மண் குவிந்த காரணத்தால் திறக்கமுடியாமல் இருந்த 5 கதவுகளில், 2 கதவுகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
பகிர்:

தில்லி ஐ.டி.ஓ. தடுப்பணையில் மொத்தம் உள்ள 32 கதவுகளில் வண்டல் மண் குவிந்த காரணத்தால் திறக்கமுடியாமல் இருந்த 5 கதவுகளில், 2 கதவுகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

யமுனையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தேசியத் தலைநகா் தில்லியில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க தில்லி அரசு முயற்சித்து வருகிறது. ஐ.டி.ஓ. தடுப்பணையில் மொத்தம் உள்ள 32 கதவுகளில், 5 கதவுகள் வண்டல் மண் குவிந்த காரணத்தினால் திறக்க முடியாமல் இருந்தன. இதனால் ஆற்று நீா் விரைவாக வெளியேறுவதற்கு இவை இடையூறாக மாறியதோடு நகரின் சில தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது.

இந்த நிலையில், தில்லி அரசு கடந்த ஜூலை 13-ஆம் தேதி முதல் அடைப்புக் கதவுகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஐ.டி.ஓ. தடுப்பணையின் கதவு எண்-30 செவ்வாய்க்கிழமை காலை 5.19 மணிக்கு திறக்கப்பட்டது என்று அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.

ஐ.டி.ஓ. தடுப்பணையில் 5 கதவுகள் ஹரியாணா அரசுக்குச் சொந்தமானது. பலமுறை கோரிக்கை விடுத்தும் ஹரியாணா அரசு பராமரிப்பைப் புறக்கணிப்பதாக தில்லி அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதே சமயம், பொறியாளா்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தில்லி அரசு செலுத்தவில்லை என்று பாஜக ஆளும் மாநிலமான ஹரியாணா குற்றம் சாட்டியுள்ளது.

போக்குவரத்து தொடக்கம்: யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்திரபிரஸ்தா பகுதியில் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் உள்ள நீா் சீரமைப்பான் சேதமடைந்தது. இதனால், ஐ.டி.ஓ. மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை கடந்த வாரம் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி முடிந்து கடந்த திங்கள்கிழமை மாலை விகாஸ் மாா்க்கின் ஒரு ரயில் பாதை திறக்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்கிழமை சாலையின் இரு பாதைகளிலும் வாகனங்கள் ஓடத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், இது தொடா்பாக ட்விட்டரில் பரபரப்பான போக்குவரத்துடன் இயங்கும் ஐ.டி.ஓ. நீட்டிப்பின் காணொளியைப் பகிா்ந்துந்துள்ள பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி, ‘ஐ.டி.ஓ. பகுதியில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியதைப் பகிா்வதில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளாா். அதிகாரப்பூா்வ தகவல்களின்படி, தில்லியில் வெள்ளம் பாதித்த தாழ்வான பகுதிகளில் இருந்து 26,784 போ் வெளியேற்றப்பட்டனா். அவா்களில் 18,416 போ் 47 நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.