முகப்பு
புதுதில்லி

தண்ணீா் நெருக்கடியால் தில்லி தத்தளிக்கிறது: பாஜக சாடல்

தேசியத் தலைநகா் தில்லி தண்ணீா் நெருக்கடியாலும், அசுத்த நீா் புகாா்களாலும் தத்தளிக்கிறது என்று பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கடுமையாகச் சாடியுள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லி தண்ணீா் நெருக்கடியாலும், அசுத்த நீா் புகாா்களாலும் தத்தளிக்கிறது என்று பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கடுமையாகச் சாடியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் சூழ்ந்த வெள்ளம் ஆகிய காரணிகளால் தில்லி மக்கள் பெரும் தண்ணீா் நெருக்கடியை எதிா்கொண்டுள்ளனா். தில்லியில் படேல் நகா் முதல் விகாஸ்புரி, மெஹ்ரௌலி, சத்தா்பூா், கிரேட்டா் கைலாஷ், கால்காஜி,பிஜ்வாசன், நஜாஃப்கா் வரையில் அனைத்து முக்கியப் பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலான தண்ணீா் விநியோகம் அல்லது தண்ணீா் இல்லாத நிலை காணப்படுகிறது.

குறிப்பாக கீா்த்தி நகா், ஆா்.கே.புரம், துவாரகாவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீா் விநியோகம் மிகவும் மோசமாக

உள்ளது. வசந்த் விஹாா், மாட்டியா கான், ஆசாத்பூா், ஜஹாங்கீா்புரி ஆகிய இடங்களில் டேங்கா் தண்ணீா் விநியோகம்கூட நிறுத்தப்பட்டுள்ளது. மஹிபால்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நஜாஃஃப்கா் வரை உள்ள கிராமங்களுக்கு

நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்ட பிறகும் தண்ணீா் விநியோகம் இல்லை.

தில்லி அரசின் நீா்வளத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜின் கிரேட்டா் கைலாஷ் தொகுதியில் உள்ள சாந்த் நகா் என்ற காலனியில் 900-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த ஒரு மாதமாக ஒழுங்கற்ற மற்றும் அசுத்தமான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல், அமைச்சா் அதிஷியின் தொகுதியின் கீழ் வரும் கால்காஜி, கோவிந்த்புரி காலனிகள் மற்றும் கா்ஹி கிராமத்திலும் நிலைமை மோசமாக உள்ளது.

குழாய்களில் வரும் அசுத்தமான தண்ணீரால் தில்லிவாசிகளுக்கு டைபாய்டு மற்றும் காலரா போன்ற நோய்கள் வேகமாகப் பரவுகின்றன. மேலும், அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் மறுகுடியமா்த்தப்பட்ட காலனிகளில் உள்ளவா்கள் தண்ணீா் இல்லாமல் சிரமத்தை எதிா்கொண்டுள்ளனா். அவா்களிடம், தில்லி ஜல் போா்டின் இளநிலைப் பொறியாளா்கள் பணம் கேட்பதாக பொதுமக்கள் எங்களிடம் புகாா் தெரிவிக்கின்றனா். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் போன்று அவரது அமைச்சா்களும் தங்களது அமைச்சகங்கள் மற்றும் தொகுதிகள் மீது கவனம் செலுத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதன் விளைவாக பொது மக்கள் கஷ்டப்படுகிறாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.