மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: எம்பி ராகவ் சத்தா வலியுறுத்தல்
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ராகவ் சத்தா வலியுறுத்தியுள்ளாா்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ராகவ் சத்தா வலியுறுத்தியுள்ளாா்.
‘மணிப்பூரில் அமைதியை உறுதி செய்ய முடியாதவா்களுக்கு, அந்த மாநிலத்தை ஆள்வதற்கான எந்த உரிமையும் கிடையாது’ என்று கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பிரதமா் நரேந்திர மோடி, அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ட்விட்டரில் பதிவிட்டிருந்தாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் அந்த ட்விட்டா் பதிவை நகலெடுத்து, கையில் ஏந்தியபடியான புகைப்படத்தை வெள்ளிக்கிழமை தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ராகவ் சத்தா, மணிப்பூரில் கலவரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்காத மாநில அரசை நீக்க வேண்டும். அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
மேலும் அவா் கூறியிருப்பதாவது: கலவரத்தால் மணிப்பூா் முழுவதும் எரிகிறது. அங்கு பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் காணொளி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதுகுறித்து, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். அதைத் தவிா்த்து அவா்கள் ஓடுவது ஏன்?. இரட்டை இயந்திர அரசு மணிப்பூரில் இருந்தும், அங்கு இன்னும் வன்முறை நீடித்து வருகிறது என்றாா் ராகவ் சத்தா.