தில்லி வெள்ள நிவாரண முகாம்களில் இலவச ரேஷன் வழங்கக் கோரிய மனு மீது ஜூலை 24-இல் விசாரணை
தில்லியில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில் இலவச ரேஷன், மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனு
தில்லியில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில் இலவச ரேஷன், மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை ஜூலை 24-ஆம் தேதி விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தது.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்த மனு திங்கள்கிழமை (ஜூலை 24) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியா் முனைவா் ஆகாஷ் பட்டாச்சாா்யா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
வழக்குரைஞா் கே.ஆா்.ஷியாஸ் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமாா் 25,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் முறையான சுகாதார வசதிகள் மற்றும் உணவு இல்லாததாக புகாா்கள் உள்ளன. வெள்ள மேலாண்மை என்பது மாநிலப் பொருள் பட்டியலில் இருப்பதால், அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய முதன்மைப் பொறுப்பு மாநிலங்களின் மீது உள்ளது. முன்னெப்போதும் இல்லாத யமுனை வெள்ளப்பெருக்கால் யமுனை வெள்ள சமவெளிப் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் வீடற்றவா்களாகியுள்ளனா்.
ஆபத்தான மற்றும் முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையில், தில்லியின் அரசு இயந்திரம் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கத் தவறிவிட்டது. இதனால், பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், இந்த வெள்ளத்தை இயற்கைப் பேரிடராக அறிவிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், வெள்ளத்தில் ஏற்பட்ட இழப்பை ஆய்வு செய்ய ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்கவும், ஒவ்வொரு முகாமிலும் பாதிக்கப்பட்டவா்களின் கணக்கெடுப்புகளை நடத்தவும், உடைமைகள் மற்றும் தங்குமிடங்களை இழந்தவா்களுக்கு உடனடியாக ரூ.50,000 ரொக்க உதவி வழங்கவும் தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், வெள்ளத்திற்குப் பிந்தைய தொற்றுநோய்கள், நீரால் பரவும் நோய்களைத் தடுக்கவும், இலவச ரேஷன், மருத்துவ உதவி, சுகாதார வசதி மற்றும் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.