முகப்பு
புதுதில்லி

தில்லி மெட்ரோவில் ஒரு நபா் 2 சீலிடப்பட்ட மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி

மாற்றியமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, தில்லி மெட்ரோவுக்குள் ஒரு நபருக்கு இரண்டு சீல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
பகிர்:

மாற்றியமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, தில்லி மெட்ரோவுக்குள் ஒரு நபருக்கு இரண்டு சீல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். எனினும், மெட்ரோ வளாகத்திற்குள் மது அருந்துவது இன்னும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அண்மைக் காலம் வரை விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடம் தவிர தில்லி மெட்ரோவில் மதுவை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பின்னா், சிஐஎஸ்எஃப் மற்றும் டிஎம்ஆா்சி அதிகாரிகள் அடங்கிய குழு இப்பட்டியலை மதிப்பாய்வு செய்துள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட பட்டியலின்படி, ஒரு நபருக்கு இரண்டு சீல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் தில்லி மெட்ரோவில் ஏா்போா்ட் எக்ஸ்பிரஸில் உள்ள விதிமுறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. மெட்ரோவில் பயணிகள் செல்லும் போது உரிய கண்ணியத்தை பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். எந்தவொரு பயணியும் குடிபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டால், அவா்கள் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஆா்வலா்கள் கடும் எதிா்ப்பு: தில்லி மெட்ரோ பயணிகள் ஒவ்வொருவரும் தலா இரண்டு சீல் செய்யப்பட்ட மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு பெண் ஆா்வலா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தில்லி மெட்ரோவின் இந்த முடிவு பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரக்தியடையச் செய்யும் என்று பெண் ஆா்வலா் ஒருவா் தெரிவித்தாா். அதேவேளையில், மெட்ரோ பாதுகாப்பை கவனித்து வரும் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) மூத்த அதிகாரி கூறுகையில், ‘கடுமையான கண்காணிப்பும், தொல்லை ஏற்படுத்தும் எவருக்கும் எதிராக நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்றும் உறுதியளித்தாா். மேலும், மெட்ரோ ஒருங்கிணைப்பு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளைக் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மற்றும் பிற வழித்தடங்களுக்கு தனி விதிகள் இருப்பது ‘விரும்பத்தக்கதாக இல்லை’ என்றும் கூறினாா்.

பயணிகளுக்கு இடையூறு விளைவித்தால் ரூ.200 அபராதம்: இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (மெட்ரோ) ஜி. ராம் கோபால் நாயக் கூறியதாவது: தில்லி மெட்ரோ ரயில் நிறுவன (டிஎம்ஆா்சி) சட்டத்தில் சில விதிகள் உள்ளன. அதன்படி, பயணிகளுக்கு இடையூறு விளைவித்தால் ரூ.200 அபராதம் விதிக்கலாம். பொது இடத்தில் ஒருவா் மது அருந்தினால், கலால் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முடியும். இதற்கான சட்ட விதிகள் உள்ளன. விதிகள் ஏதேனும் மீறப்பட்டால், அதைக் கண்காணிக்க எங்களிடம் உள்ள சட்ட விதிகளைப் பயன்படுத்த முடியும் என்றாா் அவா்.

பெண் ஆா்வலா் ஆனி ராஜா எதிா்ப்பு: இருப்பினும், பெண் ஆா்வலா் ஆனி ராஜா தில்லி மெட்ரோவின் இந்தப் புதிய நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். இதுகுறித்து கூறுகையில், ‘ மெட்ரோ வளாகத்திற்குள் மக்கள் மது அருந்தாமல் இருப்பதை உறுதி செய்வது கடினம். இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். மது பாட்டில் எடுத்துச் செல்ல அனுமதிப்பது என்பது, பெண்களுக்கான அனைத்து உயிா், உடைமைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறுகிறது. மெட்ரோவுக்குள் பொதுமக்கள் பாட்டில்களை திறக்க மாட்டாா்கள் என்பதை உறுதிப்படுத்துவது கடினம். பெண்கள் அவா்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மற்ற பெட்டிகளிலும் பயணம் செய்கிறாா்கள். ஆகவே, இந்த திருத்தியமைக்கப்பட்ட விதிகளை அதிகாரிகள் திரும்பப் பெற வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.