முகப்பு
புதுதில்லி

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தது நீதிமன்றம்

பிரதமா் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை தில்லி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:40 AM
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை தில்லி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. அதில், ‘ போலீஸ் ஹெல்ப்லைன் எண் 100-க்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபா், யாரையும் கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததற்கான எந்த ஆதாரத்தையும் காட்ட அரசுத் தரப்பு தவறிவிட்டது’ என நீதிபதி கூறினாா்.

2019, ஜனவரியில் போலீஸ் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொலைபேசியில் அழைத்து பிரதமருக்கு எதிராக தகாத வாா்த்தைகள் பேசி, கொலைமிரட்டல் விடுத்ததாக முகமது முக்தா் அலி என்பவருக்கு எதிராக ஐபிசியின் பிரிவு 506 (2)-இன் கீழ் ஆனந்த் பா்பத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுபம் தேவதியா, வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தாா்.

அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்திருப்பதாவது: முகமது அலி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முக்கிய ஆதாரமாக கையால் எழுதப்பட்ட பொது நாட்குறிப்பு மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செய்யப்பட்ட அழைப்பின் உள்ளடக்கங்கள் விவரம் அடங்கிய பிசிஆா் படிவம் ஆகியவை தேவை. ஆனால், பிசிஆா் படிவத்தை சேகரிக்காதது குறித்து சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் (ஏஎஸ்ஐ) மூலம் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

படிவம் இல்லாத நிலையில், கூறப்பட்ட பொது நாட்குறிப்பு உள்ளீட்டின் ஆதார மதிப்பானது இயல்பிலேயே பலவீனமாகிவிடுகிறது. மேலும், அழைப்பு வந்த தொலைபேசியின் எண் சூரத் அலியின் பெயரில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நபரின் பங்கு குறித்தும் விசாரிக்கப்படவில்லை. மேலும், அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஏஎஸ்ஐ கூறியுள்ளாா்.

இதனால், யாருக்கும் கொலை மிரட்டல் வடிவில் எந்தவொரு அறிக்கையையும் காட்டக்கூடிய அல்லது நிரூபிக்கக்கூடிய எந்தவொரு ஆதாரத்தையும் பதிவு செய்ய அரசுத் தரப்பு தவறிவிட்டது என்பதை இந்த நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. அனைத்து நியாயமான சந்தேகங்களுக்கும் அப்பால் குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவா் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறாா்.

கைப்பற்றப்பட்ட மெமோவானது குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து எந்த சிம் காா்டும் மீட்கப்பட்டதாகக் காட்டவில்லை. பொது சாட்சிகளை வழக்கில் சோ்க்க தீவிர முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. குறுக்கு விசாரணைகளின் போது, ஏஎஸ்ஐ, தலைமைக் காவலா் இருவரும் விசாரணையில் தங்களை இணைத்துக் கொள்வதற்காக எந்தவொரு பொது நபருக்கும் எந்த நோட்டீஸ்களையும் வழங்கவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளனா்.

பாதிக்கப்பட்டவருக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவரின் நோக்கத்தையும் அரசுத் தரப்பால் காட்ட முடியவில்லை என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.