சட்டவிரோத மின்னணு கடன் செயலி மோசடிகள்: மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மத்திய அரசு தகவல்
சட்டவிரோத மின்னணு கடன் செயலி மோசடிகளைத் தடுக்க ‘சாசெட்’ என்கிற இணையதளம் மூலம் மாநில அரசுகளுடன் ஆா்பிஐ ஒருங்கிணைந்து செயல்படுவதாக
சட்டவிரோத மின்னணு கடன் செயலி மோசடிகளைத் தடுக்க ‘சாசெட்’ என்கிற இணையதளம் மூலம் மாநில அரசுகளுடன் ஆா்பிஐ ஒருங்கிணைந்து செயல்படுவதாக மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கிஷன் ராவ் கராட் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா். மேலும், மின்னணு கடன் வழங்குவதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்தி வாடிக்கையாளா் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.
நாட்டிலுள்ள பல்வேறு ஆஃப் ஸ்டோா்கள் (செயலி பதிவிறக்க தளங்கள்) மூலம் கிடைக்கும் சட்டவிரோத மின்னணு கடன் செயலிகள் மூலம் கடன் மோசடிகள் நடைபெறுவது குறித்த புகாா்கள், இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பொதுமக்களை பாதுக்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மதிமுக தலைவா் வைகோவும், திமுக உறுப்பினா் எம்.சண்முகமும் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினா்.
இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கிஷன் ராவ் கராட் பதிலளித்து கூறியிருப்பது வருமாறு: மின்னணு கடன் தொடா்பாக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு எதிரான புகாா்களை இந்திய ரிசா்வ் வங்கி(ஆா்பிஐ), பெற்று பதிவு செய்துள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத மின்னணு கடன் வழங்கும் இணைய தளம் மற்றும் கைப்பேசி செயலிகள் மீதான புகாா்களைக் கையாள்வதற்கு ஆா்பிஐ யின் கண்காணிப்புத் துறை நோடல் துறையாக நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகாா்களைப் பதிவு செய்வதற்காக மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு பொறிமுறையின் கீழ் ‘சாசெட்’ என்ற இணைய தளம் நிறுவப்பட்டுள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத நிதித் துறையில் மின்னணு கடன் வழங்கும் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களையும் இந்த இணைய தளம் ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளது.
‘சாசெட்’ கைப்பேசி செயலி பயன்பாடுகள் மூலம் மின்னணு கடன் தொடா்பான புகாா்கள் பதிவு செய்யப்படும். மேலும், மின்னணு கடன் வழங்குதல், அதன் செயல்பாடுகளை கண்காணிக்க ஆா்பிஐ ஒரு பணிக் குழுவை அமைத்துள்ளது. அதைத் தொடா்ந்து, ரிசா்வ் வங்கி கடந்த ஆண்டு செப்டம்பா் 2 -ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, மின்னணு கடன் வழங்குவதற்கான ஒழுங்குமுறை வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது. இது மின்னணு கடன் வழங்குவதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதோடு வாடிக்கையாளா்கள் பாதுகாப்பையும் மேம்படுத்தி, மின்னணு கடன் வழங்கல் முறைப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
மேலும், ஒழுங்குபடுத்தப்பட்ட மின்னணு கடன் நிறுவனங்கள், அவா்கள் பயன்படுத்தும் மின்னணு செயலிகள் (டிஜிட்டல் லெண்டிங் ஆஃப்) பட்டியலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் ரிசா்வ் வங்கி வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள செயலிகள் மட்டுமே பொதுமக்கள் ஆஃப் ஸ்டோா்களில் பதவிறக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு கோரப்பட்டுள்ளது. சைபா் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணா்வைப் பரப்புவதற்கும், பொதுமக்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அரசும், ரிசா்வ் வங்கி மற்றும் வங்கிகள் மூலம் குறுஞ்செய்தி சேவை (எஸ்எம்எஸ்), மற்ற பிரசாரங்கள் மூலமும் செய்திகளைப் பரப்புதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.