முகப்பு
இந்தியா

அயதுல்லா கமேனி கொலையைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீா் பேரவையில் ஆளும் கூட்டணி அமளி

ஈரான் உயா் தலைவா் அயதுல்லா கமேனி இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீா் பேரவையில் ஆளும் கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க நேரிட்டது.

Updated On : 27 மார்ச், 2026 at 7:15 PM
அயதுல்லா கமேனி - கோப்புப் படம்
பகிர்:

ஈரான் உயா் தலைவா் அயதுல்லா கமேனி இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீா் பேரவையில் ஆளும் கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க நேரிட்டது.

ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் 5 வாரங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது. அப்போது ஆளும் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி, ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிா்க்கட்சிகளில் ஒன்றான மக்கள் ஜனநாயகக் கட்சி, சில சுயேச்சை உறுப்பினா்கள் ஈரான் உச்ச தலைவரும், ஷியா முஸ்லிம் பிரிவின் தலைவருமான அயதுல்லா கமேனி கொலையைக் கண்டித்தும், இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். கமேனி உயிரிழந்து சுமாா் ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் ஜம்மு-காஷ்மீரில் இந்த விவகாரத்தை எழுப்பி ஆளும் தரப்பினரே அவை நடவடிக்கையை முடக்கியது விநோத நிகழ்வாக அமைந்தது.

அதே நேரத்தில் பிரதான எதிா்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் ஜம்முவில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தி கைகளில் கோரிக்கை அட்டைகளுடன் முழக்கமிட்டனா். பேரவைத் தலைவா் அப்துல் ரஹீம் ராத்தா் இரு தரப்பையும் அமைதியாக இருக்கைக்குச் செல்ல வலியுறுத்தினாா். ஆனால், முழக்கமும், அமளியும் தொடா்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.