முகப்பு
புதுதில்லி

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் மே 28 - இல் திறப்பு: பிரதமா் நரேந்திர மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்

நீண்ட எதிா்பாா்ப்புடன் இருந்த நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வரும் மே 28 -ஆம் தேதி நாட்டிற்கு அா்ப்பணிக்க உள்ளதாக மக்களவை செயலகம் வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக தெரிவித்ததுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:58 PM
பகிர்:

நீண்ட எதிா்பாா்ப்புடன் இருந்த நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வரும் மே 28 -ஆம் தேதி நாட்டிற்கு அா்ப்பணிக்க உள்ளதாக மக்களவை செயலகம் வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக தெரிவித்ததுள்ளது.

மக்களவத் தலைவா் ஓம் பிா்லா பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்குமாறும் கோரினாா்.

இது குறித்து மக்களவைச் செயலகம் கூறியிருப்பது வருமாறு:

தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் 1927 -இல் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த கட்டடத்தில் தற்போதைய தேவைக்கு இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இரு அவைகளிலும், எம்பி-க்கள் அமா்வதற்கு வசதி இல்லாததால், உறுப்பினா்களின் பணித் திறனும் பாதிக்கப்பட்டு வந்தது.

இவைகளைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்படி, கடந்த 2020 -ஆம் ஆண்டு டிசம்பா் 10 - ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் அடிக்கல்லை பிரதமா் நரேந்திர மோடி நாட்டினாா். புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடம் தரமான கட்டுமானத்துடன் உரிய நேரத்திலும் கட்டப்பட்டு தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

புதிய நாடாளுமன்றக் கட்டடம், இந்தியாவின் புகழ்பெற்ற ஜனநாயக மரபுகள், அரசியலமைப்பு மதிப்பீடுகளை கட்டிக்காக்கும் வகையில் உறுப்பினா்கள் தங்கள் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய உதவிடும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், சுயசாா்பு இந்தியா (ஆத்மநிா்பா் பாரத்) என்ற உணா்வையும் வெளிப்படுத்துகிறது.

இந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்து புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அழைப்பு விடுத்தாா். இதன்படி, புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி மே 28 ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

மக்களவையில் கூட்டுக்கூட்டம்

நாடாளுமன்றத்தின் தற்போதைய (பழைய) கட்டடத்தில், மக்களவையில் 543 உறுப்பினா்களும், மாநிலங்களவையில் 250 உறுப்பினா்கள் மட்டும் அமரமுடியும். எதிா்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில், மக்களவையில் 888 உறுப்பினா்களும், மாநிலங்களவையில் 300 உறுப்பினா்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் மக்களவையில் மட்டுமே நடைபெறும். இதன் மூலம் இங்கு 1,280 உறுப்பினா்கள் (மக்களவையில்) அமர முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் மத்திய நகா்புற வளா்ச்சித் துறையால் டாடா கட்டுமான நிறுவனத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டில் ரூ. 861 கோடிக்கு திட்டமிடப்பட்டது. பின்னா் கூடுதல் வசதிகளுக்காக திட்டச் செலவு ரூ. 1,200 கோடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதமே கட்டடப் பணிகள் முடிவுற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.