ராம நவமி: கும்பகோணம் ராமசாமி கோயிலில் தேரோட்டம்!
ராமசுவாமி கோயிலில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..
தென்னக அயோத்தி எனப் போற்றப்படும் ராமசாமி திருக்கோயிலில் ராமநவமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தென்னக அயோத்தி எனப் போற்றப்படும் ராமசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் ஏழு நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட பழமையான திருக்கோயிலாகும்.
இங்கு ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார், ராமபிரான் சீதா தேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க, வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் விண்ணையும் மறு கையில் ராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சியளிக்கிறார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி பெருவிழா 10 நாள்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் இவ்விழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான இன்று உற்சவர் ஸ்ரீ இராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் சமேதராய் தேரில் எழுந்தருளத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ராமா ராமா என்று முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர்.